கோலாலம்பூர், நவ. 27 – இம்மாதம் 4ஆம் தேதி தொடங்கி நாடு முழுவதும்
மேற்கொள்ளப்பட்ட ஒன்பது நாள் சோதனையில் ஆலோங் எனப்படும்
லைசென்ஸ் இன்றி வட்டித் தொழிலில் ஈடுபடும் 361 சந்தேக நபர்களை
போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 18 முதல் 77 வயது வரையிலான அவர்கள் கடன்
வழங்குவது, கடனை வசூலிப்பது, வாடிக்கையாளர் சேவை அதிகாரி,
பணத்தை வழங்கும் முகவர், வங்கிக் கணக்கை வழங்கியவர்கள், சாயம்
வீசுவது, கடன் தொடர்பான பிரசுரங்களை விநியோகிப்து போன்ற
பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்று புக்கிட் அமான் வர்த்தக
குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ ரம்லி முகமது யூசுப்
கூறினார்.
இச்சோதனையின் போது சட்டவிரோத வட்டித் தொழிலுடன்
தொடர்புடையவை என நம்பப்படும் கணினிகள், வர்த்தக உரிமம், 1,439
கடன் அட்டைகள், நிறுவன முத்திரைகள், கடன் பெற்றவர்கள் தொடர்பான
விபரங்கள் அடங்கிய கோப்புகள், 12,994 வெள்ளி ரொக்கம் ஆகியவையும்
கைப்பற்றப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.
இந்த கைது நடவடிக்கைகள் தொடர்பில் மொத்தம் 136 விசாரணை
அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளன. இதுவரை 41 நபர்கள் சம்பந்தப்பட்ட 25
விசாரணை அறிக்கைகள் முழுமை பெற்று கைதான நபர்களுக்கு எதிராக
நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. மற்றவர்களுக்கு எதிரான
விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர்
சொன்னார்.
கடந்த 2021ஆம் அண்டு 997 ஆக இருந்த ஆலோங் எனப்படும் வட்டி
முதலைகள் சம்பந்தப்பட்ட புகார்களின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டில்
989ஆகவும் கடந்தாண்டு 1,162ஆகவும் உயர்க கண்டதாகவும் அவர்
கூறினார்.
இதனிடையே, போலி தொலைபேசி அழைப்பை நம்பி 55 வயதுடைய
பெண்மணி ஒருவர் 11 லட்சம் வெள்ளியை ஏமாந்த தகவலையும் அவர்
இச்செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
bernama