
” விரைவில் நடைபெற உள்ள பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிட மாட்டேன் ,”எனக்கூறியுள்ள அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு என்ன செய்வது என இன்னும் முடிவெடுக்கவில்லை என தெரிவித்து உள்ளார். கனடா பிரதமர் ஆக இருப்பவர் ஜஸ்டின் ட்ரூடோ. சொந்த கட்சியில் எழுந்த எதிர்ப்பு காரணமாக, கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகப் போவதாக அறிவித்த அவர், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை பதவியில் நீடிப்பேன் எனக்கூறியிருந்தார். அவரது கட்சி விதிப்படி, தலைவராக இருப்பவரே பிரதமர் ஆக பதவி ஏற்க முடியும். இதனையடுத்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாக அந்நாட்டு ஊடகம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: வரும் தேர்தலில் போட்டியிடவில்லை என முடிவு எடுத்து உள்ளேன். அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அடுத்து என்ன செய்வது என முடிவு செய்யவில்லை. அதற்கு நேரமும் இல்லை. தற்போது கனடா மக்கள் அளித்த பணிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.