
பிறக்கின்ற ஆங்கில வருடம் அனைவருக்கும் வளர்ச்சியைத் தந்து தளர்ச்சியை நீக்கும் வருடமாக அமைய மனமார்ந்த வாழ்த்துகள்.
இந்த ஓராண்டில் நடந்த மகிழ்ச்சியான தருணங்களை மனம் அசை போட்டுப் பார்க்கும். அடுத்த ஓராண்டுக்கான புதிய திட்டங்களை வகுப்போம். நடந்த விஷயங்களை ஆராய்ந்து, சிலவற்றைத் திருத்திக் கொள்வோம், சிலவற்றைத் தொடர்ந்து கடைப்பிடிப்போம். இவை அனைத்தும் ஜனவரி 1 பிறக்கும் ஆங்கிலப் புத்தாண்டை நோக்கியே நடைபெறும். அந்த அடிப்படையில் 2025ஆம் ஆண்டு அனைவருக்குமான ஆண்டாக மலர மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வாழ்க்கை ஏற்றத்தாழ்வு நிறைந்தது என்றாலும், நாம் எப்பொழுதும் உயர்வை நோக்கிய எண்ணங்களையே கொண்டிருக்க வேண்டும்.
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.
எண்ணுவதெல்லாம் உயர்வைப்பற்றியே எண்ண வேண்டும், அவ்வுயர்வுக் கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது எனும் திருவள்ளுவர் கூற்றுக்கு ஏற்ப இந்த வருடத்திற்கான திட்டங்களை மேற்கொள்வோம். தன் கையே தனக்குதவி. நமது வெற்றி, மேன்மை, பொருளாதார வளர்ச்சி இவையாவிற்கும் அடித்தளமாக அமைவது நமது முயற்சியே.
காலையில் விழித்தவனும் நன்றாக உழைத்தவனும் வாழ்க்கையில் தோற்றதாகச் சரித்திரம் இல்லை. இந்தப் புத்தாண்டில் அனைவரின் எண்ணங்களும் நிறைவேறி மனமகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துகள். நமது வெற்றியையும் வளர்ச்சியையும் நோக்கிப் பயணிக்கும் அதே வேளையில். மற்றவர்களுக்கு நம்மால் எந்த தீமையும் நடந்து விடக்கூடாது என்பதிலும் கவனமாக இருப்போம்.
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் – இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

