
திவேட் வாயிலாக வாழ்நாள் முழுவதும் கற்றல், மனித மூலதன மேம்பாட்டில் அரசு கவனம் செலுத்துகிறது என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி கூறினார்.
இது தொழில் சந்தைக்கு மட்டுமல்ல, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தற்போதைய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப ஒரு படைப்பாற்றல் மிக்க தலைமுறையை உருவாக்குவதற்கான முன்முயற்சிகளை உள்ளடக்கிய ஒரு விஷயமாகும்.
முன்னேற்றத்தின்வழி ஒரு தேசம் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். அந்த நம்பிக்கையை நாம் எப்போதும் விதைத்து வருகிறோம், கடைப்பிடித்து வருகிறோம்.
டிஜிட்டல் அல்லது தொழில்துறை என ஒவ்வொரு வகையான மாற்றமும் மக்களை மையமாகக் கொண்டதாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
விவேக குடிமக்கள் இல்லாமல் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்க முடியாது. மேலும் உள்ளடக்கத்தை உறுதி செய்யாமல் புதுமைகளைத் தொடர முடியாது.
உலகளாவிய திறன்கள் மன்றம் 2025 இன் தொடக்க விழாவில் அவர் தனது உரையின் போது இவ்வாறு கூறினார்.மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் இந்நிகழ்வில் துவக்க உரை நிகழ்த்தினார்.
திறன் அமைப்பை வலுப்படுத்துதல், திவேட், தொழில் 4.0 ஆகியவற்றை ஒருங்கிணைத்தல், பசுமைப் பொருளாதாரம் ஆகியவை அரசாங்கத்தின் முன்னுரிமைகளில் அடங்கும்.அவை மனிதவள அமைச்சால் உருவாக்கப்பட்ட கட்டமைப்பை செயல்படுத்துவதன் மூலம் பின்பற்றப்படுகின்றன என்று அவர் கூறினார்.
bernama

