அதிகாரப்பூர்வமாக ஆசியான் உறுப்புநாடாக இணைந்தது தீமோர் லெஸ்தே!

கோலாலம்பூர், அக் 26 — ஆசியானில் இணைவதற்காக பத்து ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருந்த தீமோர் லெஸ்தே இன்று அதிகாரப்பூர்வமாக நிரந்தர உறுப்பினராக சேர்க்கப்பட்டது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் கோலாலம்பூரில் நடைபெறுகின்ற 47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில், ஆசியான் சேர்க்கை அறிவிப்பில் கையெழுத்திடுவதன் மூலம் உறுதிசெய்யப்பட்டது.

மலேசிய பிரதமர் டத்தோ’ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஆசியான் தலைவர் என்ற நிலையில், அனைத்து உறுப்புநாடுகளின் தலைவர்களுடன் இணைந்து அந்த ஆவணத்தில் கையெழுத்திட்டார். பின்னர் கையெழுத்திடப்பட்ட அறிவிப்பு ஒப்படைக்கப்பட்ட பின் தீமோர் லெஸ்தே நாட்டின் கொடி ஆசியான் உறுப்புநாடுகளின் கொடிகளுடன் மேடையில் ஏற்றப்பட்டது.

தீமோர் லெஸ்தே ஆசியானின் 11வது உறுப்புநாடாக இணைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் கே ராலா சனானா குஸ்மாவோ (Kay Rala Xanana Gusmão) தனது உரையில், இது தமது மக்களின் நீண்டநாள் கனவு நனவாகிய தருணம் என்றும், நாட்டின் மனவலிமையின் சான்றாகும் என்றும் கூறினார்.

“தீமோர் லெஸ்தே அரசு மற்றும் மக்களின் சார்பில், ஆசியான் உறுப்புநாடுகள், தலைவர்கள், செயலாளர் நிலையம் மற்றும் எங்கள் உரையாடல் கூட்டாளிகளுக்கு இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, உங்கள் நம்பிக்கை, ஊக்கம் மற்றும் உறுதியான ஒற்றுமை இதை சாத்தியமாக்கியது,” என்றும் அவர் கூறினார்.

தீமோர் லெஸ்தே ஆசியானில் முழுமையான உறுதிப்பாட்டுடன் இணைகிறது என்றும், அமைதியான மற்றும் உற்பத்தியான உறுப்பினராக இருந்து பிராந்தியத்தின் அமைதி, முன்னேற்றத்திற்காக அனைவருடனும் இணைந்து செயல்பட உறுதி தெரிவித்தார்.

மேலும் இந்த புதிய தொடக்கம் எங்களுக்கு வர்த்தகம், முதலீடு, கல்வி மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் பெரும் வாய்ப்புகளைத் தருகிறது. நாங்கள் கற்றுக்கொள்ளவும், புதுமை செய்யவும், நல்லாட்சி நடைமுறையைப் பின்பற்றவும் தயாராக உள்ளோம்,” என்று கூரினார்.

மாநாட்டைத் திறந்து வைத்து உரையாற்றிய அன்வார், தீமோர் லெஸ்தேவின் வரலாற்றுச் சேர்க்கை ஆசியான் சமூகம் 2045 நோக்கத்திற்குப் புதிய அர்த்தத்தை வழங்குகிறது என்றும், அது ஒற்றுமையையும் மையத்தன்மையையும் வலியுறுத்துகிறது என்றும் கூறினார்.

“அதன் இணைப்பு ஆசியான் குடும்பத்தை முழுமைப்படுத்தி, நமது பகிர்ந்துக்கொள்ளப்பட்ட விதி மற்றும் பிராந்திய உறவின்மையின் உணர்வை மீண்டும் உறுதிசெய்கிறது. இந்தக் குடும்பத்தில் தீமோர் லெஸ்தேவின் முன்னேற்றமும் அதன் மூலதன சுயாட்சியும் உறுதியான ஆதரவைப் பெறும்,” என அவர் கூறினார்.

Bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles