ஹாட் யாய் ஒட்டல்களில் தங்கியிருக்கும் மலேசியர்கள் தற்காலிக இடமாற்றத்திற்கு தயாராக இருக்க அறிவுறுத்தல்

சோங்லா, நவ 23 —  வெள்ளத்தால்  ஹாட் யாயில்  ஹோட்டல்களில் தங்கியிருக்கும் அனைத்து மலேசியர்களும், உள்ளூர் அதிகாரிகள் பாதுகாப்பான இடங்களுக்கு தற்காலிக இடமாற்றம் செய்ய ஏதுவாக, தங்களது ஹோட்டல் லாபிகளில் காத்திருக்குமாறு சோங்லாவில் உள்ள மலேசிய துணைத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

துணைத் தூதரகமும் ஹாட் யாய் உள்ளூர் அதிகாரிகளும் இடையிலான ஒருங்கிணைப்பு ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன; விரைவில் இடமாற்றம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.இடமாற்ற செயல்முறை சுமூகமாக நடைபெற அனைத்து பாதிக்கப்பட்ட மலேசியர்களும் ஒத்துழைப்பு வழங்குமாறு துணைத் தூதரகம் கேட்டுக்கொண்டது.

மேலதிக விசாரணைகளுக்கு சோங்லாவில் உள்ள மலேசிய துணைத் தூதரகத்தின் பணி அதிகாரியை +6681-9901930 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இதற்கிடையில், சோங்லாவில் உள்ள மலேசிய துணைத் தூதர் அஹ்மட் ஃபாமி அஹ்மட் சர்காவி, உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து மலேசியர்களை வெள்ளப் பகுதிகளிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற முழு முயற்சி எடுத்து வருவதாக பெர்னாமா விடம் தெரிவித்தார்.

“ஹாட் யாயில் இன்னும் மழை பெய்து வருகிறது; நேற்று மார்பளவு இருந்த வெள்ளம் இன்று முழங்கால் அளவுக்கு குறைந்துள்ளது… உள்ளூர் அதிகாரிகளின் உதவியுடன் உணவு உதவியும் இடமாற்றப் பணிகளும் நடந்து வருகின்றன,” என்றார் அவர்.பாதிக்கப்பட்ட அனைத்து மலேசியர்களின் தகவல்களையும் அவர்கள் தங்கியுள்ள இடங்களையும் சேகரிக்க துணைத் தூதரகத்தில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஃபாமி கூறினார்.

இன்று முன்னதாக, ஹாட்யாய்-சோங்லா ஹோட்டல்கள் சங்கத் தலைவர் சித்திபோங் சித்திப்ராபாவுடன் இணைந்து, ஹாட் யாயில் உள்ள அனைத்து வெள்ள பாதிக்கப்பட்டவர்களுக்கும் உணவு தயாரிக்கப்படும் தாவர உணவு மையத்தை அவர் பார்வையிட்டார்.ஹாட் யாயில் பல ஹோட்டல்களில் தங்கியுள்ள பாதிக்கப்பட்டவர்களுக்கு டிரக்குகளில் 2,000 சூடான சைவ உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப் பட்டுள்ளதாக சித்திபோங் தெரிவித்தார்.

“நீர் வற்றத் தொடங்கியிருந்தாலும் மழை தொடர்கிறது. கனமழை இல்லை என்றாலும், டிரக் மூலம் அனைவரையும் நகரத்திலிருந்து வெளியேற்றுவதில் சிரமம் உள்ளது,” என்றார் அவர்.நேற்று மலேசிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, ஹாட் யாய் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 4,000 மலேசியர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்; ஆனால் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles