
கோலாலம்பூர், ஜூலை 8-
ஜொகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, இந்திய சமூகத்தினர் பழைய அரசியல் வாக்குறுதிகள் மற்றும் உணர்ச்சிவசப்பட்ட பிரச்சாரங்களில் சிக்கிக் கொள்ளாமல், பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்தின் செயல்திறன் மற்றும் சாதனைகளின் அடிப்படையில் தங்களது அரசியல் முடிவை எடுக்க வேண்டும் என்று பிகேஆர் மத்திய தலைமைக் குழு உறுப்பினரும், செந்தோசா சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் குணராஜ் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம், “நம்பிக்கை” என்ற புதிய அத்தியாயத்தை அனைத்து இன மக்களுக்கும், குறிப்பாக இந்திய சமூகத்திற்கும் உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
பிரதமர் அன்வார் இப்ராஹிம் தனது அரசியல் பயணத்தின் தொடக்கத்திலிருந்தே இனவாத அரசியலை உடைத்து, ஒற்றுமை, நீதி மற்றும் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை அடிப்படையாகக் கொண்ட மலேசியாவை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.
“இன அரசியல் மட்டும் இன்றைய மலேசியாவின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது. கொள்கைகள், செயல்திறன் மற்றும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் அரசியலே நாட்டை முன்னேற்றும். அதனால்தான் மடானி கொள்கையை பிரதமர் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்,” என்று டாக்டர் குணராஜ் தெரிவித்தார்.
மேலும், ஜொகூர் மாநிலத் தேர்தல், வளர்ச்சி, அரசியல் நிலைத்தன்மை மற்றும் மக்கள் நலனை உறுதிப்படுத்தும் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் முக்கியமான வாய்ப்பாகும் என்றும் அவர் கூறினார்.

