



ஈப்போ ஜூலை 25-
மலேசியத் திருநாட்டில் மிகவும் புகழ்பெற்ற முருகப் பெருமான் திருத்தலங்களில் ஒன்றாக ஈப்போ கல்லு மலை திருமுருகன் கோவில் வலம் வருகிறது.
தமிழ்க் கடவுள் முருகப் பெருமான் குடிக்கொண்டிருக்கும் ஈப்போ கல்லு மலை முருகன் கோவிலில் இன்றிரவு சமய இசை கச்சேரி மற்றும் பாரம்பரிய நடனங்களுடன் விழா இனிதே தொடங்கியது.
பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ சிவநேசன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பினாங்கு பத்து ஊபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் மற்றும் ஊத்தாங் மெலிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் வசந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாலை 6.30 மணிக்கு மேல் சிறப்பு பூசை நடைபெற்றது.
பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ சிவநேசன், ஈப்போ கல்லு மலை முருகன் கோவில் தலைவர் சீத்தாராமன் மற்றும் பேராக் மாநில இந்து சங்கத்தின் தலைவர் பொன்.சந்திரன்,0 மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் உட்பட பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர்.
பின்னர் இசை விழா தொடங்கிய போது
சிம்மோர் கிளைபாங் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் கிராமிய நடனம்,ஈப்போ மகிழம்பூ மற்றும் சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப் பள்ளி மாணவர்களின் சொற்பொழிவு அனைவரையும் கவர்ந்தது.
பேராக் மாநில அரசு மற்றும் ஈப்போ இந்து தேவஸ்தான பாரிபாலன சபா (IHDPS) இணைந்து இந்த தேசிய திருமுருகன் மாநாட்டை நடத்திய வேளையில் தேசிய திருமுருகன் மாநாட்டை காண மக்கள் வெள்ளம் பெரும் அளவில் திரண்டது உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

