
கோலாலம்பூர், செப் 9 : நேபாளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சென்றடைவதற்காக, மலேசியா யுனைடெட் சீக்கியர் (United Sikhs Malaysia) அமைப்பைச் சேர்ந்த ஐவர் கொண்ட நிவாரணக் குழுவினர், கரடு முரடான சாலைகள், குறுகிய பாதைகள், சேற்றுப் பள்ளங்கள் மற்றும் குறைந்த எரிபொருள் ஆகிய சவால்களுக்கு மத்தியில் 16 மணி நேரக் கடுமையான பயணத்தை மேற்கொண்டனர்.
ஆபத்தான மாற்றுப் பாதைகள் காரணமாக அவர்கள் காத்மாண்டுவிலிருந்து துஞ்சே (Dhunche) நகரை வந்தடைவதற்குள் மிகவும் மெதுவாகவும் எச்சரிக்கையுடனும் பயணிக்க வேண்டியிருந்தது என அக்குழுவிற்குத் தலைமை தாங்கிய அவ்வமைப்பின் துணைத் தலைவர் மந்தீப் சிங் தெரிவித்தார்.
செப்டம்பர் 6 நள்ளிரவில் துஞ்சே நகரில் தங்களின் செயல்பாட்டுத் தளத்தை அமைத்த இக்குழுவினர், பின்னர் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யவும், பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை மதிப்பிடவும் ஷஃப்ருபேசி (Syafrubesi) நோக்கிப் பயணித்தனர்.

