
கோலாலம்பூர், செப்.18: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கை வீட்டுக் காவலில் வைப்பது தொடர்பான ஆவணத்தில் தாம் ஒருபோதும் கையெழுத்திடவில்லை என்று பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேச அமைச்சரான ஹன்னா யோ மறுத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஹன்னா யோ இன்று அதிகாலை தனது எக்ஸ் சமூக ஊடகப் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
தாம் எந்தவொரு வீட்டுக் காவல் உத்தரவிலும் கையெழுத்திடவில்லை; அந்த ஆவணம் சமூக ஊடகங்களில் பரவியபோது மன்னிப்பு வாரியம் இன்னும் கூட்டத்தை நடத்தவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், போலியான ஆவணத்தைப் பொதுமக்கள் தொடர்ந்து பகிர வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாகத் தனது பத்திரிகைச் செயலாளர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, நஜிப் ரசாக்கை வீட்டுக் காவலில் வைப்பது தொடர்பான உத்தரவு எனக் கூறப்படும் ஓர் ஆவணம் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது. அந்த ஆவணத்தில் ஹன்னா யோ கையெழுத்திட்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.

