மாதத்திற்கு 800 கிலோவாட் வரையிலான வீட்டு மின்சாரப் பயன்பாட்டுக்கு உதவித் தொகை – பிரதமர்

ஷா ஆலாம், செப் 18 – அரசாங்கம் வீட்டு மின்சாரத்துக்கான உதவித் தொகை வரம்பை உயர்த்தியுள்ளது. இதற்கு முன்னர் 600 கிலோவாட் வரையிலான மின்சாரப் பயன்பாட்டுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது. தற்போது அது 800 கிலோவாட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.

மின்கட்டண உயர்வை அடுத்து பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் ஒரு முயற்சியாக இந்த உதவியை அரசாங்கம் அறிவித்துள்ளது.

செப்டம்பர் மாதம் தொடங்கி 2026 டிசம்பர் 31 -ஆம் தேதி வரையிலான மின்சாரப் பயன்பாட்டுக்கு இந்த புதிய உதவித் தொகை உயர்வு பயன்படுத்தப்படுமென பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது ஃபேஸ்புக் பதிவின் மூலம் அறிவித்தார்.

“இந்த புதிய அறிவிப்பின் மூலம் , மாதத்திற்கு 800 கிலோவாட் வரையிலான மின்சாரத்தைப் பயன்படுத்தும் பயனீட்டாளர்களுக்கு, உலகளாவிய எரிபொருள் விலை மற்றும் அந்நிய செலாவணி விகிதத்திற்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் மாறும் கட்டண விகிதம், சில்லறை கட்டணம், விற்பனை சேவை வரி ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிக்கப்படும்” என பிரதமர் கூறினார்.

அண்மைய காலமாக நாட்டில் ஏற்பட்டிருக்கும் புகை மூட்டத்தாலும், வெப்பத்தினாலும் , வீடுகளில் மின்சாரப் பயன்பாடு மாதத்திற்கு 600 கிலோவாட்டுக்கும் மேல் அதிகரித்துள்ளது. இது மின் கட்டண உயர்வுக்கு வித்திட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, மின் கட்டண உயர்வு குறித்த எந்தவொரு முடிவும் மக்களைப் பாதிக்காமல் இருக்க அரசாங்கம் தொடர்ந்து, எரிபொருளுக்கான செலவையும் எரிசக்தி சந்தையையும் கண்காணித்து வருவதாக பிரதமர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles