
கிள்ளான், ஜூன் 18- வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள மதிப்பீட்டு வரி உயர்வு குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிப்பதற்கான நடவடிக்கையை செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் முன்னெடுத்துள்ளார்.
கிள்ளான் அரச மாநகர் மன்றம் வரும் காலங்களில் மக்களுக்குச் சிறப்பான சேவையை வழங்குவதை உறுதி செய்வதற்கு இந்த வரி உயர்வு அவசியம் என்பதை பொது மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர் சொன்னார்.
இவ்விவகாரம் தொடர்பில் பொது மக்களுக்கு விளக்கமளிக்கும் அதே வேளையில் இரு தினங்களுக்கு முன்னர் வரி உயர்வு தொடர்பான விளக்கமளிப்பிலும் நான் கலந்து கொண்டேன்.
அச்சந்திப்பின் போது மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்குவது குறித்து மாநகர் மன்ற அதிகாரிகளுடன் விவாதித்தேன் என்று அவர் தெரிவித்தார்.
மதிப்பீட்டு வரி உயர்வு காணும் பட்சத்தில் சேவைத் தரமும் உயர்வு கண்டாக வேண்டுமே தவிர மேலும் மோசமடையக் கூடாது. ஆகவே, இந்த சந்திப்பின் போது குப்பைகளை அகற்றுவது மற்றும் வெள்ளம் தொடர்பான விவகாரங்களை நான் வலியுறுத்தினேன் என்றார் அவர்.
Selangor kini

