



செ.வே.முத்தமிழ்மன்னன்
கோலாலம்பூர், ஜூலை 29-
மலேசியாவிலும் தமிழ் நாட்டிலும் உள்ள வர்த்தக வாய்ப்புகளை பரிமாறிக் கொள்வதற்கு இரு வழி கலந்துரையாடல் உதவும் என்று சிலாங்கூர் இந்திய வர்த்தக மற்றும் தொழில்முனைவர் சம்மேளனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ சண்முகநாதன் மற்றும் துணை தலைவர் டத்தோ புத்ரி சிவம் தெரிவித்தனர்.
மலேசிய-தமிழ் நாட்டு வர்த்தகர்களின் மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு தலைநகரில் ஆக்கப்பூர்வ கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது.
தமிழ் நாடு வர்த்தகர்களுக்காக மலேசியாவில் காணப்படும் வர்த்தக வாய்ப்புகள் குறித்து டத்தோஸ்ரீ சண்முகநாதன் மற்றும் டத்தோ புத்ரி சிவம் விவரித்தனர்.
சிலாங்கூர் இந்திய வர்த்தக மற்றும் தொழில்முனைவர் சம்மேளனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ சண்முகநாதன் மற்றும் துணைத் தலைவர் டத்தோ புத்ரி சிவம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ்நாட்டில் இருந்து 50க்கும் ஏராளமான தொழில் முனைவோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
கோலாலம்பூர், கோர்ட்டு மலை பிள்ளையார் கோவில் அருகிலுள்ள சிக்னெட்ஸர் ஹோட்டலில் நேற்று இரவு விருந்து டன் நடைபெற்றது.
தமிழகத்திற்கு வருகை புரியும் மலேசிய வர்த்தகர்களுக்கு தமிழக அமைச்சர்களை சந்திக்க உரிய ஏற்பாட்டை செய்வதோடு அவர்களின் தொழில் விரிவாக்கத்திற்குத் துணை புரியவும் தாங்கள் தயாராக இருப்பதாக தமிழ் நாட்டு வர்த்தக சங்கத்தின் தலைவர் ஏ.எம். விக்ரம் ராஜா தெரிவித்தார்.
அதே வேளையில், இவர்களுக்கு நல்ல வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து சரியான நேரத்தில் இவர்களுக்கு வருமானம் வந்து சேர்வதையும் உறுதிப்படுத்தவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனை மலேசியாவிலும் தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
தமிழ்நாட்டு வர்த்தகச் சங்கத்தின் செயலாளர் கோவிந்தராஜ், இளம் தொழில்முனைவர் சம்மேளனத்தின் தலைவர் ஆனந்த் உட்பட 50க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு வர்த்தக பேராளர்கள் பயன்மிக்க இந்த கலந்துரையாடலில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
மலேசிய-தமிழக வர்த்தக பேராளர்கள் சந்திப்பு இருவழி வர்த்தக உறவை மேம்படுத்துவதில் முக்கிய உறவு பாலமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது

