
கோலாலம்பூர் ஜூலை 19-
இணைய பகடிவதைக்கு கடுமையான தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தை வரைந்து அதை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும்படி சிலாங்கூர் மாநில மைபிபிபி கட்சியின் இடைக்கால தலைவர் டாக்டர் சுரேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இணையப் பகடிவதையால் சமூக ஊடகப் பிரபலம் ஈஷா தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து இணையப் பகடிவதை தொடர்பான புதிய சட்டத்தை அரசாங்கம் இயற்றவுள்ளதாக என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் நேற்று கூறியிருப்பதை வரவேற்கிறேன்.
இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காகச் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றதாக அமைச்சர் கூறி இருக்கிறார்
ஒரு உயிரைப் பறிக்கும் அளவுக்கு இணைய பகடிவதை அமைந்து விட்டது.
இன்று இணைய பகடிவதை செய்யும் நபர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை விதிக்கப்படவில்லை.
குற்றத்தை ஒப்புக் கொண்டு வெறும் 100 வெள்ளி அபராதம் செலுத்தி நீதிமன்றத்தில் இருந்து ஜாலியாக புன்னகையோடு நடந்து செல்கிறார்கள்.
இந்த காட்சியை பார்த்து ஈஷாவின் தாயார் புஷ்பாவும் மனம் நொந்து பேசியிருக்கிறார்.
ஆகவே அரசாங்கம் இனியும் காலம் கடத்தாமல் இணைய பகடிவதை செய்யும் நபர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை விதிக்க சட்டத்தை இயற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப புதிய சட்டங்களை இயற்ற வேண்டியதன் அவசியத்தை அரசு ஆராய வேண்டும்.
அப்போதுதான் இணைய பகடிவதை சம்பவத்திற்கு முற்று புள்ளி வைக்க முடியும் என்று உலுலங்காட் மைபிபிபி தொகுதி தலைவருமான டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.
இதனிடையே இரவு நேரத்தில் டிக்டோக்கை முடக்க வேண்டும். ஒரு நபர் தனது அடையாளக் கார்ட் மூலம் ஒரு கணக்கை மட்டுமே வைத்திருக்கும் வகையில் விதிமுறைகள் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.
போலி டிக்டோக் கணக்கை அரசாங்கம் முறியடிக்க வேண்டும்.மேலும் இந்த டிக் டோக் வியாபாரம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு மட்டுமே பயன்படுத்தும் வகையில் அரசாங்கம் நெறிமுறை படுத்த வேண்டும் என்று அவர் ஆணித்தரமாக வலியுறுத்தினார்.

