
பெந்தோங், ஜூலை 31-
மாரான் ஶ்ரீ மரத்தாண்டவர் ஆலய நிர்வாகத்தைச் சூழ்ந்துள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கும், அதன் எதிர்கால நன்மைக்கு வழிகோலுவதற்கும் ஏதுவாக, தாம் நடுநிலை வகிப்பதாக ஆலயத்தின் செயலாளர் முனைவர் ஜெ.ஜெயாந்திரன் தெரிவித்தார்.
ஆலய நிர்வாகத் தேர்தலில் ஏற்பட்ட குழப்பத்தை தொடர்ந்து, ஒரு தரப்பினர் நீதிமன்றம் சென்றுள்ளதாக தகவல் அறிந்தேன்.
இது, இரு தரப்பினருக்கிடையிலான தலைமைத்துவ போராக இருக்கின்ற நிலையில், முடிவான தீர்ப்பு வரும் வரை எந்தத் தரப்புக்கும் சார்பாக செயல்பட போவதில்லை . ஆலயத்தின் நன்மையையும் சீரான நிர்வாகத்தையும் கருதி, எல்லா சூழலிலும் நான் நடுநிலை வகிக்க விரும்புகிறேன்.
ஆலயத்தின் செயலாளர் என்ற முறையில் நிர்வாகம் மற்றும் ஆவணங்கள் சம்பந்தமாக பேச விரும்பினால், என் வழக்கறிஞர் மூலமாக கடிதம் வழி அணுகினால் நான் ஒத்துழைப்பு நல்க தயார்.
இதற்கிடையில், எந்தச் சர்ச்சையிலும் தில்லுமுல்லுகளிலும் சம்பந்தப்படாத என்னையும்
என் குடும்பத்தாரையும் வேண்டுமென்றே களங்கம் ஏற்படுத்தும் தரப்பினர் மீது நான் மான நஷ்ட வழக்கு உட்பட அனைத்து சட்ட ரீதியிலான நடவடிக்கைகளையும் தொடுப்பேன்.
அண்மையில் எனக்கு மிரட்டல் விடுத்து, என் மீது அபாண்டமாக பழி சுமத்திய இருவர் மீதும் என் வழக்கறிஞர் மூலமாக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளேன்.
இதனைத் தொடர்ந்து, என்னையும் ஆலயத்தின் நடப்பு நிர்வாகத்தினரையும் அவதூறாக சாடுவதையும், அபாண்டமாக பழி சுமத்தி களங்கம் ஏற்படுத்துவதையும் சம்பந்தப்பட்ட தரப்பினர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என முனைவர் ஜெ.ஜெயாந்திரன் ஓர் அறிக்கை வழி இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாரான் ஶ்ரீ மரத்தாண்டவர் ஆலய நிர்வாகத் தேர்தலில் கள்ள வாக்குகள் ஊடுருவியதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, தேர்தல் முழுமைப் பெறாமல் நின்று போனது.
இதில், முன்னாள் தலைவர் பி.ராமன் நடப்புத் தலைவர் டத்தோ க.தமிழ்ச்செல்வனை எதிர்த்து நீதிமன்றம் சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையில் இருப்பதாகவும், மாரான் ஶ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தின் அதிகாரப்பூர்வ நிர்வாகம் தொங்கு நிலையில் இருப்பதாகவும் அறியமுடிகிறது.
இதற்கிடையில், ஆலயத்தின் செயலாளராக பொறுப்பேற்றிருந்த முனைவர் ஜெ.ஜெயாந்திரன் இரு தரப்பு சர்ச்சையில் தமக்கு தொடர்பில்லை என்றும், ஆலயத்தின் நன்மை கருதி தாம் நடுநிலை வகிக்க விரும்புவதாகவும் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

