
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மேற்கொண்ட இந்தியப் பயணம் நாட்டிற்கு மிகப் பெரிய வளர்ச்சியை தரும் மலேசிய இந்திய சிறுதொழில் வணிகர்கள் சம்மேளனத்தின் தலைவர் டத்தோ ஆர். இராமநாதன் இந்நம்பிக்கையை தெரிவித்தார்.
இந்தியாவுக்கு 3 நாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று இந்திய பிரதமர் மோடியை சந்தித்தார்.
இந்த சந்திப்பில் அவர் இரு நாடுகள் இடையிலான உறவுகள், வர்த்தகம் தொழில் நுட்பம் உட்பட பல விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும் மலாயா பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள இந்திய ஆய்வியல் துறையில் திருவள்ளுவர் ஆய்வு இருக்கையை நிறுவ வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மோடி முன்வைத்த கோரிக்கையை பிரதமர் அன்வார் இப்ராஹிம் உடனே ஏற்றுக் கொண்டு அங்கீகாரம் வழங்கினார்.
இது, மலேசியாவில் வாழ்கின்ற இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கக் கூடியதாகும்.
இந்த நல்ல கோரிக்கையை முன்வைத்த இந்தியப் பிரதமர் மோடிக்கும் உடனே ஏற்றுக் கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும் இரு நாடுகளுக்கு இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. டாடா குழுமம், இமாமி அக்ரோ டெக் லிமிடெட், எச்சிஎல் டெக்னோஜிஸ் ஆகியவை சம்பந்தப்பட்ட இம் மூன்று பெரு வர்த்தக இந்திய நிறுவனங்களுடன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பின் மூலம் அந்நிறுவனங்கள் மலேசியாவில் முதலீடு செய்ய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. இதன் மூலம் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். குறிப்பாக நாட்டிற்கும் மிகப் பெரிய வளர்ச்சியைக் கொண்டு வரும் என்று டத்தோ இராமநாதன் கூறினார்.

