
ஈப்போ, ஜன.2: நாடு முழுவதும் அருணகிரிநாதர் சமய விழா நடத்தப்பட வேண்டும். இத்தகைய சமய நெறி விழாவின் வாயிலாக இன்றைய இந்திய இளைஞர்களை நெறிப்படுத்தி தமது இலக்கை அடைய ஏதுவாக அமையும். தற்போது மலேசிய திருநாட்டில் 8 நகர்களில் இவ்விழா சிறப்பாக நடைப்பெற்று வருகிறது.
இருப்பினும் இது போதாது. இத்தகைய சமய விழா நாடு முழுவதும் நடைப்பெற்றால் அனைவருக்கும் நன்மையாகும் என்று பிரதமர் துறை இலாகாவின் பிரதமரின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன் ஈப்போ அருணகிரிநாதர் விழாவில் முதன்மை பிரமுகராக கலந்துக்கொண்டபோது இவ்வாறு கூறினார்.
அருணகிரி நாதர் போன்ற சமய விழாக்கள் இந்நாட்டில் அதிகரிக்க வேண்டும். இவ்வாறு செய்தால்தான் நமது இந்திய இளைஞர்களை ஒருமுகப்படுத்தி முறையான நெறியுடன் செயல்படுத்த முடியும். இதன் அடிப்படையில் கடந்தாண்டு இந்தியர்களின் மேம்பாட்டிற்கு பிரதமர் துறை இலாகா 10 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்தாண்டு திருமுறை ஓதும் நிகழ்விற்கு மலேசிய இந்து சங்க பேரவைக்கு 2 இலட்சத்து 30 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி வழங்கி விட்டதாக அவர் கூறினார். அத்துடன், இந்திய சமூக இயக்கங்கள் மற்றும் இந்திய மாணவர்களுக்கு கல்வி நிதியுதவி மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிகளும், ஆலயங்களும் காக்கப்பட வேண்டும் என்று ஒவ்வொரு இந்தியரும் உணருதல் அவசியம். தமிழ்ப்பள்ளிகள் இருக்க வேண்டும் என்றால் இந்திய பெற்றோர்கள் தங்கள் பி்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு முதலில் அனுப்ப வேண்டும். தற்போது குறைந்த மாணவர்கள் கொண்டுள்ள ஒரு சில தமிழ்ப்பள்ளிகள் மூடும் அபாயத்தில் உள்ளன என்று அவர் வருத்தமாக கூறினார்.
இந்நாட்டில் தற்போது 8 நகர்களில் கடந்த டிசம்பர் 25 முதல் ஜனவரி 4 வரை அருணகிரி நாதர் விழா நடைபெற்று வரும். அவற்றில் ஈப்போவில் நடைபெறும் அருணகிரிநாதர் விழாவின் முத்தாய்ப்பு அங்கமாக திகழ்கிறது என்று ஈப்போ அருணகிரிநாதர் விழா மன்ற தலைவரும், ஏற்பாட்டுக்குழு தலைவருமான மகப்பேறு மருத்தவர் வ.ஜெயபாலன் கூறினார்.
இவ்வாண்டு ஈப்போவில் கடந்த நான்கு நாட்களாக அமுதம் என்ற சமய பண்பாடு வகுப்புகள் நடைபெற்றன. அதில் 110 மாணவர்கள் பங்கு பெற்றனர். அவர்களை பொற்கிழிக்கவிஞர் பேராசிரியர் சொ.சொ.மீ.சுந்தரம் சிறப்பாக வழிநடத்தனார் என்று அவர் குறிப்பிட்டார்.
அதுமட்டுமின்றி, முதல் முறையாக ஈப்போ அருணகிரிநாதர் விழாவில் 108 வேல்களை கொண்டு வேல் வழிபாடு தொடங்கி சரித்திரம் படைக்கப்பட்டது. இந்நிகழ்வில் 160 மகளிர்கள் வேல் வழிபாட்டில் கலந்துக்கொண்டதாக அவர் கோடிக்காட்டினார்.

