
ஆந்திரா: ஜன 4- தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஐதராபாத் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.
புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சி கடந்த 4ஆம் தேதி வெளியானபோது ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் பலியானார்.
அவரது மகன் ஸ்ரீதேஜ் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், சிக்கடப்பள்ளி போலீசார் அல்லு அர்ஜூனை கடந்த 13ம் தேதி கைது செய்தனர்.
சிறையில் அடைக்கப்பட்ட அவர் உயர் நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் நாம்பள்ளி நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது; அல்லு அர்ஜுன் தரப்பில் வாதாடிய மூத்த வழக்குரைஞர் அசோக் ரெட்டி, அல்லு அர்ஜுன் வேண்டுமென்றே யாரையும் புண்படுத்த விரும்பவில்லை.
இதற்கு முன்னதாக, ஹிந்தி திரைப்படமான ரயீஸ் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியிலும் ஒருவர் உயிரிழந்ததாக சுட்டிக்காட்டினார்.
இந்தச் சம்பவத்தில் நடிகர் மீது மட்டும் குற்றம் சாட்ட முடியாது என்று அசோக் ரெட்டி எடுத்துரைத்தார்.
தொடர்ந்து அல்லு அர்ஜுனுக்கு நாம்பள்ளி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
மேலும் ரூ 1 லட்சம் பிணைத்தொகை செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

