
கோலாலம்பூர், ஜன.13-
இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணமாக இன்று தொடங்கி நான்கு நாள்களுக்குத் தமிழர்கள் அனைவரும் பொங்கல் திருநாளை விமரிசையாகக் கொண்டாடவிருக்கின்றனர். தமிழ் நாள்காட்டியின்படி (திருவள்ளுவர் ஆண்டு) தை மாதத்தின் தொடக்கமாக இந்தப் பொங்கல் விழா வரவேற்கப்படுகின்றது.
எனவே, இந்த ஆண்டு பொங்கல் விழாவைக் குடும்பத்தினருடனும் அன்புக்குரியவர்களுடனும் மிகவும் மகிழ்ச்சியாகவும் அர்த்தமுள்ளதாகவும் அனைவரும் கொண்டாட வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் தரப்பில், குறிப்பாக இந்தியர்கள் உட்பட எந்தவொரு சமூகத்தினரும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய நாங்கள் தொடர்ந்து கடினமாக உழைப்போம். இந்தியர்களிடையே நிலவும் வறுமை அரசாங்கத்தின் முன்னுரிமையாக இருக்கும் என டத்தோஸ்ரீ அன்வார் ரெரிவித்தார்.
அதன் அடிப்படையில், நாட்டில் ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என தான் பெரிதும் நம்புகிறேன் என்றார்.
மலேசியக் குடும்பத்தின் சார்பாக, குறிப்பாக, தமிழ் சமூகத்தினர் உள்ளிட்ட அனைத்து இந்திய சமூகத்தினருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டினையும், பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

