
பட்டர்வொர்த், ஜனவரி 25:
சிவன் ஆலயம் கட்டுவதும், அதனை முழுமையாக நிறைவு செய்வதும் எளிதான காரியம் அல்ல. எனினும், இந்தப் பெரிய பணியில் பங்கு பெறும் வாய்ப்பு கிடைத்தது என் பாக்கியம் என மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர். எஸ். தனேந்திரன் தெரிவித்தார்.
பட்டர்வொர்த் பகுதியில் அமைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கங்காதரன் சிவபெருமான் ஆலயத்தின் கட்டுமான பணிகள், ஆலய தேவஸ்தானத்துடன் இணைந்து சக்தி அறவாரியம் மேற்கொண்டு வருகிறது.
இந்த ஆலயத்தின் ராஜகோபுரம் 9 நெல்லை உயரமாகவும், இரு இணை கோபுரங்கள் 5 நெல்லை உயரமாகவும் அமைக்கப்படுகின்றன. தற்போதைய நிலவரப்படி, ஆலயத்தின் அடித்தள கட்டுமானம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இன்னும் மூன்று ஆண்டுகளில் ஆலய கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவேறும் என டத்தோஸ்ரீ தனேந்திரன் கூறினார்.
பட்டர்வொர்த் பிராயில் உள்ள ஆற்றின் கரையோரத்தில் எழுப்பப்படும் இந்த ஆலயத்தின் கருவறை கருங்கல்லில் கட்டப்படும். மேலும், ஆலயத்தை சுற்றி 108 சிவலிங்கங்கள் நிறுவப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆலயத்தில் 360 நாட்களும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
இந்த ஆலயத்தின் கட்டுமானப் பணிக்காக நிதி திரட்டும் விழா இன்று பட்டர்வொர்த் லைட் தங்குவிடுதியில் நடைபெற்றது. விழாவில் மண்டபம் நிரம்ப மக்கள் கலந்துகொண்டனர். சிங்கப்பூர், சீனா, தமிழ்நாடு உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்த முக்கிய பிரமுகர்கள் விழாவில் கலந்து கொண்டு ஆதரவு அளித்தனர்.

