
ஈப்போ, ஜன. 26 இந்நாட்டில் ஆணுறுப்பு புற்றுநோய் 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக, 70 வயதிற்கும் மேற்பட்ட ஆண்கள் கடுமையான பாதிப்பை எதிர்நோக்குவதாக ஈப்போ ராஜா பைனுன் மருத்துவமனையில் ஆணுறுப்பு புற்றுநோய் வுழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடக்கி வைத்தபோது பேராக் மாநில சுகாதாரம் , மனித வளம், ஒற்றுமை, இந்திய சமூகநலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.
இந்நாட்டில் சுகாதார இலாகாவின் ஆய்வுபடி இந்த வியாதியால் 45.2 சதவீதத்தில் சீன ஆடவர்கள் பாதித்துள்ளனர். அவர்களை தொடர்ந்து மலாய்காரர்கள் 38.3 சதவீதம், இந்தியர்கள் 6.7 சதவீதம் மற்றும் மற்றவர்கள் 9.8 சதவீதம் பாதித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, புற்றுநோய் விவகாரத்தில் 538 பதிவில் 319 பதிவு ஆணுறுப்பு புற்றுநோய் என்பதாகும்.
கடந்த 2022 வரை இந்த மருத்துவமனையில் இந்த வியாதிக்கான மருத்துவர்கள் கிடையாது. ஆனால், தற்போது 3 நிபுணத்துவ மருத்துவர்கள் பணுயாற்றி வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.
பேராக் மாநிலத்தில் 14 மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த மருத்துவமனைகளில் இவ்வியாதிக்கான முதல்கட்ட சிகிச்சை பெற்று வந்தாலும் தற்போது இவ்வியாதிக்கான சிறப்பு சிகிச்சையை இந்த மருத்துவமனையில் பொதுமக்கள் பெறமுடியும். இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு பேராக் மாநில அரசாங்கம் 30 ஆயிரம் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இப்பிரச்சாரம் டாக்டர் ஆர்.கார்த்தியாயினி தலைமையில் சிறப்பாக ஏற்பாடு செய்தமைக்கு அவர் பாராட்டை தெரிவித்துக்கொண்டார்.
சீனியை எதிர்த்து முதல்கட்டமாக பேராக் மாநில அரசாங்கம் போரை தொடங்கியுள்ளது.
குறிப்பாக, இனிவரும் காலங்களில் மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் இனிப்பான பானங்கள் கிடையாது.
வெறும் நீர் மட்டுமே வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று அ.சிவநேசன் கருத்துரைத்தார்.
இவ்விவகாரம் தொடர்பாக பேராக் மாநில சுகாதார இலாகாவின் இயக்குநர் சீனியால் ஏற்படும் பாதிப்பு குறித்து அரசாங்கத்திடம் ஆய்வு கட்டுரை ஒன்றை சமர்பிக்கவுள்ளார்.
அதன் பின், அனைத்து அரசாங்க பணிமனை மற்றும் இலாகாவில் சீனி பானங்கள் முற்றாக துடைத்தொழிக்கப்படும் என்று அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து இந்த பிரச்சாரம் உணவகங்கள், தங்கும் விடுதிகளுக்கு கொண்டு செல்லப்படும். அத்துடன் அவ்வப்போது இப்பிரச்சாரத்தின் விளைவுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக, பேராக் மாநிலம் சீனியை எதிர்த்து முதன்மை பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கியதாக அவர் அறைகூவல் விடுத்தார்.

