
ஜாலான் மஸ்ஜித் இந்தியா தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் தொடர்பான பிரச்சினையைத் தீர்ப்பதில் தனக்கு உதவிய அமைச்சரவையில் உள்ள முஸ்லிம் அல்லாத சகாக்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் எனது நன்றி என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இந்தப் பிரச்சினையை தெளிவுபடுத்துவதற்காகக் களத்திற்குச் சென்ற தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன், இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் ஆகியோர் அவர்களில் அடங்குவர்.
அதே வேளையில் பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேச அமைச்சு, கோலாலம்பூர் மாநகர் மன்றம் உட்பட அனைவருக்கும் எனது நன்றி.
ஒவ்வொருவரும் தங்கள் சொந்த இனத்தின் ஹீரோவாக மாறினால் இந்த நாடு அழிந்து விடும்.
அவர்கள் மலேசியாவின் தலைவர்களாக இருக்க விரும்புகிறார்கள்.
ஆனால் இன வெறுப்பு உணர்வுகளின் சார்பாகப் பேசுகிறார்கள்.
சட்டத்தைப் பொருட்படுத்தாமல், அது உண்மையா பொய்யா என்பதைப் பொருட்படுத்தாமல் பேசுகின்றனர்.
இதனால் நாட்டில் சர்ச்சை தான் ஏற்படுகிறது.
தலைநகரில் இன்று நடைபெற்ற மடானி பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழாவில் பேசும்போது அவர் இதனை கூறினார்.
இந்த விவகாரத்தில் பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டு இறுதித் தீர்வைத் தீர்மானிப்பதற்கு முன்பு,
கோலாலம்பூர் மாநகர் மன்றம், மத அலுவலகங்கள் போன்ற பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டதாக பிரதமர் கூறினார்.

