
சுபாங் ஜெயா, ஏப். 7 – புத்ரா ஹைட்ஸ் எரிவாயுக் குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட நபரை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று இங்குள்ள கம்போங் கோலா சுங்கை பாருவில் சந்தித்தார்.
அம்னோ இளைஞர் தலைவர் டத்தோ அக்மல் சாலே, சிலாங்கூர் மாநில சட்டமன்ற துணை சபாநாயகர் முகமது கம்ரி கமருடின் ஆகியோருடன் தற்காலிக தங்குமிடத்தில் அடைக்கலம் நாடியிருக்கும் முகமது ரட்ஸி முகமட் ரஷீட்டுடன் சுமார் 30 நிமிடங்களை அமிருடின் செலவிட்டார்.
பின்னர் அவர் சுபாங் ஜெயா மாநகர் மன்ற மண்டப தற்காலிக நிவாரண மையத்தில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட மற்றவர்களை சென்று கண்டார்.
சம்பவத்தின் போது நிலவிய பயங்கரமான சூழ்நிலையைப் பற்றிய அனுபவங்களை மூன்று தலைவர்களிடமும் 42 வயதான ரட்ஸி பகிர்ந்து கொண்டார்.
தலை மற்றும் கைகால்களில் தீக்காயங்களுக்கு ஆளான ராட்ஸி, சிகிச்சைக்குப் பின் செர்டாங் மருத்துவமனையில் இருந்து வெளியேறி சேதமடைந்த தனது வீட்டிற்கு அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார்.
அமிருடின் மற்றும் அக்மல் சாலே ஆகியோர் தன் மீது காட்டிய அக்கறைக்கும் தன் குடும்பத்தினரை சந்தித்ததற்கும் அவர் நன்றி தெரிவித்தார். இது போன்ற கடினமான சூழ்நிலைகளில் தனது உற்சாகத்திற்கு இது ஒரு ஊக்கமாக அமைந்தது என்றும் அவர் கூறினார்.

