
சென்னை: தமிழக பாஜ தலைவராக அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் நயினார் நாகேந்திரனை டெல்லி வரும்படி மேலிடம் அழைத்துள்ளால் நேற்று இரவு விமானத்தில் புறப்பட்டுச் சென்றார்.
தமிழக பாஜ தலைவராக உள்ள அண்ணாமலையின் பதவிக்காலம் முடிந்துள்ளது. புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியை மேலிடம் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை டெல்லி வரும்படி அமித்ஷா அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, ரகசியமாக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார். அப்போது, அவர் கூட்டணிக்கு கண்டிப்பாக வரவேண்டும், அதிமுக முன்னாள் நிர்வாகிகளை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று அமித்ஷா நிபந்தனை விதித்ததாக கூறப்பட்டது. அப்போது அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று எடப்பாடி நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மாநில தலைவர் பதவிக்கான ரேசில் முதலிடத்தில் உள்ள நயினார் நாகேந்திரன் நேற்று இரவு சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். இன்று காலையில் அவர் மோடி, அமித்ஷா மற்றும் தேசிய தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை சந்தித்துப் பேசுகிறார். மாநில தலைவர் நியமிக்கப்பட உள்ள நிலையில் நயினார் டெல்லி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

