
பத்துகாஜா,ஏப்16: ஒவ்வொரு இந்து ஆலயங்களும் நம் சயமத்தின் மாண்பாகவும் நம் மதம்,சமயம் சார்ந்த ஆக்கப்பூர்வமான நம்பிக்கைக்கும் அதுசார்ந்த முன்னெடுப்புகளுக்கும் அடித்தலமாக திகழ்ந்திட வேண்டும் என பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் கோரிக்கை விடுத்தார்.
அதேவேளையில்,ஆலயங்களை முறையாக பதிவு செய்தல்,நில விவகாரங்களுக்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்தல்,நன்முறையில் தீர்வுகாணுதல் என பல்வேறு விடயங்களில் ஆலய நிர்வாகங்கள் தனித்துவ கவனம் செலுத்திடவும் வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும்,சமயம் சார்ந்த நடவடிக்கைகளோ சமூகப்பணிகளிலும் குறிப்பாக கல்வி சார்ந்த செயல்பாடுகளிலும் ஆலயங்களின் பங்களிப்பு இன்றையச் சூழலில் மிக அவசியமானதாய் இருப்பதாகவும் சுட்டுக்காண்பித்தார்.அதுமட்டுமின்றி,இளம் தலைமுறை,குறிப்பாக மாணவர்கள் மத்தியில் சமய நம்பிக்கை,நெறிமுறை ஆகியவற்றை ஆழமாய் பதிவு செய்திட ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் அவசியமென்றும் குறிப்பிட்டார்.
மெங்லெம்பு தேவிஶ்ரீ ஆதிபராசக்தி ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வெ.30 ஆயிரத்தை ஆலய நிர்வாகத்திடன் மானியமாக வழங்கிய பின்னர் சிவகுமார் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.தொடர்ந்து ஆக்கப்பூர்வமான சமயப்பணியை முன்னெடுத்து வரும் ஆலய நிர்வாகத்தின் தொடர்ப்பணிகளுக்காக இம்மானியம் வழங்கப்படுவதாக கூறிய அவர் இந்த நன்கொடை பூசாரிகளுக்கான ஊதியம், சடங்கு உபகரணங்கள், தற்காலிக கட்டமைப்புகள், பாதுகாப்பு சேவைகள் மற்றும் ஹோமம், யாக சாலை, நாதஸ்வர இசை மற்றும் மலர் பிரசாதம் போன்ற பாரம்பரியத் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு செலவுகளை ஈடுகட்ட பெரும் உதவியாக இருக்குமென அவர் தனது நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
ஆலயத்தின் கும்பாபிஷேகம் நேர்த்தியாகவும் சமயநெறியோடும் நடந்தேறிய நிலையில் அதனை நிறைவாகவும் வெற்றிகரமாகவும் செய்துமுடித்த ஆலய நிர்வாகத்திற்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொண்ட சிவகுமார் இவ்வாலயம் இந்து சமூகத்தின் மத்தியில் பக்தி,நல்லிணக்கம் மற்றும் கலாச்சார பெருமை ஆகியவற்றை மெய்ப்பிக்கும் ஆன்மீக மையமாக தொடர்ந்து செழிக்கட்டும் என்றும் பெருமிதமாய் தெரிவித்தார்.