
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர், ஏப்.17-
செராஸ் தமிழ்ப் பள்ளி முன்னாள் மாணவர் சங்கமும் மலேசிய முன்னாள் தமிழ்ப்பள்ளி மாணவர் சங்கமும் (பெர்தாமா) கூட்டு முயற்சியாக அறிமுகம் செய்யும் ‘வாசிப்பை நேசிப்போம்’ 61 நித்திரை கதைகள் திட்டம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மத்தியில் வாசிக்கும் பழக்கத்தை வளப்படுத்தும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அற்புதமான கூட்டு முயற்சியில் முன்னாள் மாணவச் சங்கங்களையும் சமூகத் தலைவர்களையும் ஒன்றிணைத்து, நித்திரை கதைகள் தொகுப்பை மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் இளைய தலைமுறையை ஒரே இலக்குடன் செயல்பட பெரிதும் ஊக்குவிக்கிறது.
இத்திட்டத்தின் மூலம் வாசிப்பு பழக்கத்தை அதிகரிப்பதுடன் கதை சொல்லும் களத்தை உருவாக்கி, மாணவர்களின் மொழி ஆற்றலை மேம்ப்படுத்த முடியும்.
இந்த வாசிப்பை நேசிப்போம்- 61 நித்திரை கதை புத்தகத்தை ஆசிரியர்கள் நிரோஷா கோபால், கஸ்தூரி ராமலிங்கம் ஆகியோர் எழுதி தயாரித்துள்ளனர்.
இந்த புத்தகத்தின் அறிமுக விழா நேற்று பிரிக்பீல்ட்ஸ் நுண்கலையில் உள்ள அன்னலட்சுமி உணவகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
தொழில் முனைவோத் கூட்டுறவு மேம்பாட்டு துணையமைச்சரின் மூத்த செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் சிறப்பு வருகை தந்து அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
நித்திரைக் கதைகள் எனும் புத்தகத்தை வாங்கி உங்கள் பிள்ளைகளுக்கோ அல்லது தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கோ வாங்கி தாராளமாக வழங்கலாம் என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.
மேல் விவரங்களுக்கு 017-6834685 என்ற எண்ணுடன் பார்த்திபன் ராமசந்திரனை தொடர்புக் கொள்ளலாம்.

