
ஜார்ஜ் டவுன், ஏப்ரல் 29, 2025 – இலக்கவியல் அமைச்சு, பினாங்கு மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் இலக்கவியல் தொழில்நுட்ப மாற்றத்தை ஊக்குவிக்கும் என இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ உறுதி கூறினார்.
இன்று காலை பினாங்கு, ஜார்ஜ் டவுனில் நடைபெற்ற மலேசியா டிஜிட்டல் திறந்த நாள் (Malaysia Digital – MD) 2025 நிகழ்ச்சி இதற்கு ஒரு சான்று என அவர் கூறினார்.
நாடு இலக்கவியல் தொழில்நுட்பத்தில் முன்னேற வட மாநிலங்களும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான முக்கிய அம்சமாகச் செயல்பட வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தினார். பினாங்கு, கெடா, பேரா, பெர்லிஸ் ஆகிய மாநிலங்களில் இலக்கவியல் தொழில்நுட்பத்தின் அனைத்து பயன்பாடுகளும் நன்மைகளும், மாநில வட்டார இருப்பிட பேதமின்றி அனைத்து மக்களும் பெற இலக்கவியல் அமைச்சு பாடுபடும்.
கடந்த சில மாதங்களாக நாட்டின் இலக்கவியல் தொழில்நுட்பத்தை வலுப்படுத்தும் நோக்கில், இலக்கவியல் அமைச்சு பல முக்கிய திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
மேலும், நேற்று முதல் அமலுக்கு வந்த தரவு பகிர்வுச் சட்டம் 2025, அரசாங்கத்துக்கும் நிறுவனங்களுக்குமிடையேயான, வலுமிக்க அடித்தளத்தை ஏற்படுத்துவதோடு, தரவுகளை ஆதாரமாகக் கொண்டு முடிவுகள் மேற்கொள்ள அந்தச் சட்டம் வழிவகுக்கும்.
இலக்கவியல் அமைச்சின் கீழ் செயல்படும் இலக்கவியல் பொருளாதார கழகம் (MDEC) குறு, சிறு நடுத்தர தொழில்முனைவர்கள் மின்னியல் வணிகத்தில் தங்களை தகுதிபடுத்திக் கொள்ள மின்னியல் வியாபாரத் திட்டத்தை(Inisiatif Pendigitalan Perniagaan-BDI) செயல்படுத்துகிறது. இந்த முயற்சிகள் அனைத்தும் மலேசியா டிஜிட்டல் (Malaysia Digital-MD) 2025-ன் நோக்கம் வெற்றியடைய பெரும் பங்காற்றுகின்றன.
நாடு இலக்கவியல் தொழில்நுட்பத் துறையில் பீடுநடைபோட, இலக்கவியல் பொருளதார கழகம், இலக்கவியல் தொழில்நுட்ப துறைசார் அமைப்புகளோடு இலக்கவியல் அமைச்சு இணைந்து செயலாற்றும் என கோபிந்த் சிங் டியோ உறுதியளித்தார்.

