
கோலாலம்பூர் மே 7-
நீர்வளம், நிலவளம், மலைவளம் நிறைந்த சொர்ண பூமியாய் மலேசிய திருநாட்டின் தலைநகரம் கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் குடிக் கொண்டிருக்கும் அருள்மிகு தேவிஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில் வரும் மே 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 132 ஆம் ஆண்டு மகோற்சவ திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறவிருக்கிறது.
காலை 6.30 மணிக்கு மேல் நித்திய பூஜையுடன் தேவிஸ்ரீ பத்ரகாளியம்மனுக்கு 108 சங்காபிஷேகம் நடைபெறுகிறது.
காலை 9.00 மணிக்கு மேல் ஜாலான் லேபோ அம்பாங்கில் இருந்து பால்குடம் ஊர்வலம் தொடங்குகிறது.
வழக்கம் போல பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு காணிக்கை செலுத்துவார்கள்.
நண்பகல் 12.00 மணிக்கு மேல் மகேஷ்வர பூஜையை தொடர்ந்து 5,000 பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் பரிமாறப்படும்.
மெட்ராஸ் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் ராஜேந்திரன் சுசிலா தம்பதியர் இம்முறை அன்னதானம் வழங்குகிறார்கள்.
மாலை 6.30 மணிக்கு மேல் ஆலய நித்திய பூஜையை தொடர்ந்து ரதம் ஊர்வலமும் நடைபெறும் என்று ஆலய பொருளாளர் கிருஷ்ணா பிரபு தெரிவித்தார்.
ஆலயத் தலைவர் டாக்டர் பார்த்தீபன் தலைமையில் பலத்த பாதுகாப்பு மத்தியில் திருவிழா நடைபெறுகிறது என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
ஆலயத் தலைமை குருக்கள் பூவேந்திரன், குருக்கள் நந்தா, துணை குருக்கள் பகாவதி ஆகியோர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து சிறப்பித்தனர்.

