
ஷா ஆலம், ஜூலை 10 – இங்குள்ள புக்கிட் கெமுனிங் சாலை கடந்த 30
ஆண்டுளாக முறையான பராமரிப்பின்றி இருப்பது தொடர்பில் கோத்தா
கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் நேற்று முன்தினம்
வெளியிட்ட காணொளி, சமூகத்தின் மத்தியில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்திய நிலையில் பொதுப்பணித் துறையின் அதிகாரிகள்
பாதிக்கப்பட்ட பகுதியில் களமிறங்கினர்.
சாலையோரம் உள்ள கால்வாய்கள் துரிதகதியில் துப்புரவு செய்யப்பட்டதோடு சாலைகளிலும் மையக் கோடுகள் அமைக்கும் பணியும் இரவோடு இரவாக மேற்கொள்ளப்பட்டது.
சம்பவ இடத்திற்கு நேற்று வருகை புரிந்து பொதுப்பணி அதிகாரிகள்
மேற்கொண்டு வரும் பணிகளை நேரில் ஆய்வு செய்ததாகத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் கூறினார்.
கோத்தா கெமுனிங் குறிப்பாகப் புக்கிட் கெமுனிங் வட்டார மக்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்காக சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொண்ட கிள்ளான் பொதுப்பணி இலாகா மற்றும் பொதுப்பணி அமைச்சுக்கு தாம்
நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில்
வெளியிட்ட பதிவொன்றில் தெரிவித்தார்.
இதனிடையே சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷின் அந்த காணொளிப்
பதிவைத் தொடர்ந்து நேற்று பல்வேறு பராமரிப்பு பணிகள்
முன்னெடுக்கப்பட்டதாக ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர்
யோகேஸ்வரி சாமிநாதன் தெரிவித்தார்.

