மஞ்சோய், பங்கோர் அரசாங்க கிளினிக் அடுத்தாண்டு தொடக்கத்தில் திறக்கப்படும்.

ஈப்போ, ஆக.20: இங்குள்ள மஞ்சோய் தொகுதியில் அரசு கிளினிக் கட்டுமானப்பணிகள் சுமார் 84 சதவீதம் முடிவு பெற்றுவிட்டது. மேலும் 16 சதவீதம் இவ்வாண்டு இறுதிக்குள் முற்றுப்பெற்றுவிடும். ஆகையால், அடுத்தாண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் இந்த கிளினிக் செயல்படும் என்று மஞ்சோய் கிளினிக்கின் கட்டுமானப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டபோது பேராக் சுகாதாரம், மனிதவளம், ஒற்றுமை, இந்திய சமூகநலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.

இந்த மஞ்சோய் அரசு கிளினிக் கடந்த 2020 ம் ஆண்டில் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். ஆனால், அப்பொழுது கோவிட் 19 தொற்று வியாதியின் தாக்கத்தால் கட்டுமானப்பணிகள் தாமதமாகின. அதுமட்டுமின்றி, குத்தகையாளர் மாற்றம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் எதிர்நோக்கியதால் இந்த கிளினிக் கட்டுமானப்பணிகள் தாமதம் அடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், பங்கோரின் அரசாங்க கிளினிக்கிலும் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கேயும் இவ்வாண்டு இறுதியில் கட்டுமானப்பணிகள் முற்றுப்பெற்றவுடன், அடுத்தாண்டு முதல் மக்களின் தேவைக்கு அந்த கிளினிக் செயல்படும் என்று அவர் அறிவித்தார்.

அதுமட்டுமின்றி, கிரியான் மாவட்டத்தில் பாரிட் புந்தார் மருத்துவமனையும் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. அதன் கட்டுமானப்பணிகள் இவ்வாண்டு இறுதியில் முடிந்து விடும். பின்னர் அடுத்தாண்டு முதல் அந்த மருத்துவமனையும் பயன்படுத்தலாம் என்று அவர் மகிழ்ச்சியுடன் சொன்னார்.

அதோடு, ஈப்போ கிரின்டவுன் அரசாங்க கிளினிக்கின் இணைக்கட்டம் கட்டப்பட்டு வருகிறது. அதன் கட்டுமானப்பணிகள் இவ்வாண்டில் முற்றுப்பெற்றுவிடும். அதன் அடிப்படையில் அடுத்தாண்டு முதல் அந்த இணைக்கட்டடத்தை மக்களின் தேவைக்கு பயன்படுத்த முடியும் என்று அவர் விளக்கமளித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles