


ஈப்போ, செப்.5: இங்குள்ள ஈப்போ வட்டாரத்தில் அமைந்துள்ள இடைநிலைப்பள்ளிகளில் பயிலும் இந்திய மாணவர்கள் பயன் பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக ” செயற்கை நுண்ணறிவு” பயிற்சி பட்டறையை கிந்தா இந்தியர் சங்கம், சுங்கை பாரி ஆண்கள் இடைநிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு சிறப்பாக நடந்தேறியது.
இந்நிகழ்வில் சுமார் இவ்வட்டாரத்திலுள்ள 145 இடைநிலைப்பள்ளியை சேர்ந்த படிவம் 4,5 மாணவர்கள் பங்கு பெற்று நன்மை அடைந்தனர். இந்நிகழ்வினை ஈப்போ மாவட்ட போலீஸ்துறையின் குற்றத் தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு துறையின் தலைவரான டிஎஸ்பி நோர் அக்மால் ரம்லி தொடக்கி வைத்தார்.
அவருடன் கிந்தா இந்தியர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஆர்.தங்கராஜா, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் இரா.ஜெயசீலன்,பேராக் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் வே.விஜய் மற்றும் தலைமையாசிரியர் கலந்து சிறப்பித்தனர்.
செயற்கை நுண்ணறிவு வாயிலாக மனிதர்களின் வேலைகளை சுலபமாக்கி விடுகிறது. இதனால், நேரம் விரயமாகமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணிகள் நிறைவு செய்யப்படுகின்றன.
இத்தகைய நிலைப்பாடு மனித வளர்ச்சிக்கும், ஆய்விற்கும் மிகவும் அவசியமானது என்று இதன் பயிற்சியாளர் எஸ்.ஷாலினி கூறினார்.
அதுமட்டுமின்றி, இன்றைய நவீன மேம்பாட்டிற்கும், தொழில்நுட்ப வளர்ச்சியை நோக்கி செயற்கை நுண்ணறிவு செயல்நடவடிக்கைகள் கொண்டு செல்லும் என்று அவர் குறிப்பிட்டார்.
இத்திட்டம் மாணவர்களுக்கு படிப்பினையாக அமையும் பொருட்டு அமலாக்கம் செய்யப்படுகிறது. எதிர்வரும் காலத்தில் பல சவால்களை இந்த மாணவர்கள் சந்திக்க வேண்டிய நிலைப்பாடு உருவாகி வருகிறது.
அதற்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக இந்த செயற்கை நுண்ணறிவு பயிற்சி பட்டறையை ஏற்பாட்டுக்குழுவினர் மாணவர்கள் நன்மையை கருதி ஏற்பாடு செய்துள்ளனர் என்று அவர் பாராட்டினார்.
இந்நிகழ்வின் நிறைவுவிழாவில் பங்கு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழை வழங்கி சிறப்பித்தனர்.
டத்தோ ஆர்.தங்கராஜா, இரா.ஜெயசீலன், பள்ளித் தலைமையாசியர். மாணவர்கள் மற்றும் வருகையாளர்களுக்கு மதிய உணவு வழங்கி உதவினார் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார்.

