லைசென்ஸ் இன்றி காரை ஓட்டிய 16 வயது பள்ளி மாணவன் கைது

கோல நெருஸ், செப். 11 – லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியதோடு போலீசாரின் உத்தரவைப் புறக்கணித்து ரோந்து காரை இடித்ததற்காக ஒரு பதின்ம வயது மாணவரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை இங்குள்ள ஜாலான் பண்டார் பாருவில் நிகழ்ந்தது.

கோலா திரங்கானு மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் ரோந்துப் பிரிவைச் சேர்ந்த இரண்டு காவலர்கள் மாலை 6.30 மணியளவில் பணியில் ஈடுபட்டிருந்த போது ஆடவர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு சாம்பல் நிற புரோட்டான் வீரா காரை ஓட்டிச் செல்வதைக் கண்டதாக கோல திரங்கானு மாவட்ட துணை காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் வான் முகமட் ஜாக்கி வான் இஸ்மாயில் கூறினார்.

பின்னர் போலீசார் அந்த காரை நெருங்கி அதன் ஓட்டுநரை நிறுத்த உத்தரவிட்டனர். எனினும் அந்த உத்தரவை அலட்சியப்படுத்திய சந்தேக நபர் தனது வாகனத்தை வேகமாக ஓட்டி தப்பிச் செல்ல முயன்றார்.

பின்னர் போலீசார் காரைத் துரத்திச் சென்றதோடு காரை நிறுத்துமாறு சந்தேக நபரை நோக்கி ஒலி பெருக்கி மூலம் பலமுறை உத்தரவிட்டனர். ஆனால் அந்த உத்தரை சந்தேக நபர் பொருட்படுத்தவில்லை.

சந்தேக நபர் தொடர்ந்து காரை ஆபத்தான முறையில் ஓட்டியதோடு போல்ஸ் ரோந்துக் காரையும் மோதித் தள்ள முயன்றார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக அதிகாரிகள் கடுமையான எச்சரிக்கையாக துப்பாக்கியை வெளியே எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இறுதியில் சந்தேக நபரை காரை மெதுவாக நிறுத்தினார் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

பள்ளி மாணவரான அந்த16 வயது நிரம்பிய சந்தேக நபர் தனது சகோதரரின் காரை அனுமதியின்றி ஓட்டிச் சென்றது விசாரணையில் கண்டறியப்பட்டதாக வான் முகமது ஜாக்கி கூறினார்.

மேல் விசாரணை மற்றும் நடவடிக்கைக்காக சந்தேக நபரின் பெற்றோரை போலீசார் தொடர்பு கொண்டனர்.

உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காக சந்தேக நபருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபடக்கூடாது என்று கடுமையான எச்சரிக்கையும் ஆலோசனையும் வழங்கப்பட்டப் பின்னர் சந்தேக நபர் விடுவிக்கப்பட்டார் என்று அவர் கூறினார்.

Bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles