

காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் அக் 11-
மலேசியத் தமிழ்ப் பத்திரிக்கையாளர் சங்கத்தின் மேம்பாட்டிற்காக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் RM50,000 மானியம் வழங்கவுள்ளதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த சிங் டியோ தெரிவித்தார்.
நேற்று முன்தினம் ஜாலான் ஈப்போவிலுள்ள உணவகத்தில் நடைபெற்ற மலேசியத் தமிழ்ப் பத்திரிக்கையாளர் சங்கத்தின் தீபாவளி விருந்து நிகழ்ச்சியில் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
தமிழ் ஊடகங்கள் மலேசிய சமூகத்தின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் முக்கிய குரலாக உள்ளன. தமிழ் ஊடகங்களும் மற்ற மொழி ஊடகங்களுடன் இணைந்து மலேசிய சமூகத்தின் ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் செயல்படுகின்றன.
அரசு, எல்லா மொழி ஊடகங்களின் வளர்ச்சிக்கும் சமமான ஆதரவு அளிக்கும் என்று கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
தமது அமைச்சின் சார்பில் 25,000 வழங்குவதாக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அறிவித்தார்.
இந்நிலையில், இவ்வாண்டு தீபாவளி விருந்தை சிறப்பாக நடத்த நிதி உதவி வழங்கிய இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மற்றும் ஆதரவு அளித்த அனைவருக்கும் மலேசியத் தமிழ்ப் பத்திரிக்கையாளர் சங்கத் தலைவர் முத்தமிழ் மன்னன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பிரதமரின் சிறப்பு அதிகாரி திரு. சண்முகம் மூக்கன், சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராய்டு, கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன், உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன், சிலாங்கூர் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ சண்முகநாதன், மலேசிய நகரத்தார் சங்கத்தின் தலைவர் டத்தோ இராமநாதன், பெர்னாஸ் வாரிய உறுப்பினர் டத்தோ புத்ரி சிவம், ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் சுரேந்திரன் கந்தா உட்பட பல முக்கிய பிரமுகர்கள் இந்த விழாவில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஶ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுரேன் கந்தா உட்பட பல சிறப்பு பிரமுகர்கள், மலேசியத் தமிழ்ப் பத்திரிக்கையாளர் சங்க உறுப்பினர்கள் என சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.