
பத்துகாஜா,அக்24: சுமார் நூற்றாண்டுகளாக கல்வி மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் பங்காற்றி வரும் செபூத்தே சீனப்பள்ளியின் கல்வி சேவை பயணத்தை தாம் பெரிதும் போற்றுவதாக பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு வ.சிவகுமார் குறிப்பிட்டார்.
இவ்வட்டாரச் சீன சமூகத்தின் கல்வி மேம்பாட்டிலும் வளர்ச்சியிலும் தலைமுறைகள் கடந்து தனக்கான வரலாற்றினை மெய்ப்பித்திருக்கும் இப்பள்ளியின் கல்வி சேவை மென்மேலும் சிறக்க வெ.10 ஆயிரத்தை மானியமாகவும் வழங்கினார் சிவகுமார்.
மேலும்,இப்பள்ளியின் கல்வி பயணம் நனிச் சிறந்ததாகவே அமைந்துள்ளது.கல்வியிலும் புறப்பாட நடவடிக்கைகளிலும் தனித்துவமான இப்பள்ளி இவ்வட்டாரத்தின் சிறந்த பள்ளிகளில் ஒன்று என்வும் நாடாளுமன்ற உறுப்பினர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி,பள்ளி நிர்வாகம்,பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் அதன் வாரியக்குழு என அனைத்து தரப்பும் பள்ளியின் வளர்ச்சியோடு மாணவர்களின் எதிர்காலம் சிறக்கவும் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் ஆக்கப்பூர்வமானதாகவும் செயல் திறன் மிக்கதாகவும் இருப்பதாக மேலும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் இப்பள்ளியில் சீன மாணவர்களோடு மலாய்,இந்திய மாணவர்களும் பயில்வதாக கூறியதோடு பல்லின மக்களின் ஒற்றுமை,புரிந்துணர்வு மற்றும் ஒருமைப்பாட்டின் களமாகவும் இப்பள்ளி திகழ்வதை தாம் பெருமையாக கருதுவதாகவும் சிவகுமார் பெருமிதத்தோடு தெரிவித்தார்.

