சிலாங்கூர் அரசு உதவி திட்ட தகுதி வரம்புகளை மறுபரிசீலனை செய்யும்- பாப்பாராய்டு

சிலாங்கூரின் நலத்திட்டங்களால் நடுத்தர வருமானக் குழு (M40) பயனடையும் வாய்ப்பை உறுதி செய்வதற்காக, பல உதவித் திட்டங்களின் தகுதி வரம்புகளை மறுஆய்வு செய்ய மாநில அரசு தயாராக உள்ளது. இதன் மூலம் நடுத்தர வருமானக் குழுவான M40க்கும் மாநில நலத்திட்டங்களின் பயன் கிடைக்க வழிவகுக்கும் என மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு தெரிவித்தார்.

தற்போதைய கடுமையான தகுதி அளவுகளினால் மிகக் குறைவான, B40 மற்றும் M40 குழுக்களின் குடும்பங்கள் பயனடைகின்றன.

எனவே, தற்போதைய பொருளாதார நிலைமைக்கு ஏற்ப அதனை திருத்துவது அவசியம் என அவர் கூறினார்.

மாநில அரசு எப்போதும் அனைத்து தரப்பினருக்கும் உதவ உறுதியாக உள்ளது. ஆனால் சில உதவித் திட்டங்களுக்கான வருமான வரம்புகள் இன்னும் B40 குழுவுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதனால், அந்த வரம்புகளை மறுஆய்வு செய்து, குறிப்பாக கீழ்நிலையான M40 குடும்பங்களும் இதன் பலனை பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அவர் மீடியா சிலாங்கூர் தயாரித்த “Bicara Semasa” நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

M40 குழுவிலிருந்து வரும் விண்ணப்பங்கள், வருமான நிலைமையைக் கொண்டு தானாகவே நிராகரிக்கப்படுவதில்லை; மாறாக, ஒவ்வொரு விண்ணப்பமும் முழுமையாக மதிப்பீடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு குடும்பத்தினரின் சுமைகளை நாங்கள் கருத்தில் கொள்கிறோம். அதில் குழந்தைகளின் எண்ணிக்கை, முதியோர் பெற்றோரைக் கவனிக்கும் பொறுப்பு, துணைவர் வேலை இழந்துள்ளாரா போன்ற காரணங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

“இந்த அணுகுமுறை மூலம் இந்த இரு பிரிவுகளின் எல்லைக்கோட்டில் வாழும் M40 குடும்பங்கள் உதவியிலிருந்து விலக்கப்படாமல் இருப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம்,” என அவர் கூறினார். மேலும் ‘இல்திசாம் சிலாங்கூர் பென்யாயாங் (ஐஎஸ்பி)’ (Iltizam Selangor Penyayang – ISP) முயற்சியின் கீழ் சில திட்டங்கள் ஏற்கனவே M40 குழுவிற்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதில் சுகாதாரம், கல்வி, வீடமைப்பு மற்றும் தொழில்முனைவோர் சார்ந்த உதவிகள் அடங்கும்.

தற்போது, சிலாங்கூர் மாநிலம் ISP கீழ் மொத்தம் 46 நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் RM600 மில்லியனுக்கும் மேல் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் அனைத்தும் சமூகத்தின் தரப்பினருக்கும் பயன்படும்வகையில் தொடர்ந்து மேம்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles