
பெட்டாலிங் ஜெயா, ஜன.11-
தமிழ்ப்பள்ளிகளில் போதிக்கப்படும் நன்னெறி கல்வி பாடத்திட்டத்தில் சனதான தர்ம கல்வி போதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமர், கல்வி அமைச்சுக்கு மகஜர் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் ஸ்ரீ காசி தங்க.கணேசன் தெரிவித்தார்.
சனதான தர்மம் கல்வி மனித வாழ்வியல், பண்பு நலன்கள், குணம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
சனதான தர்மத்தை போதிப்பதன் வழி சிறு வயது முதலே நம் இன மாணவர்களை நெறிப்படுத்த முடியும் என்று நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தங்க.கணேசன் வலியுறுத்தினார்.
நன்னெறி கல்வி பாடப் போதனையின் வழி சனதான தர்ம பாடத்தை போதிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க மலேசிய இந்து சங்கம் தயாராக உள்ளது என்று அவர் சொன்னார்.
எங்களது இயக்கத்திலும் கைத்தேர்ந்த ஆசிரியர்கள் இருப்பதால் சனதான தர்மக் கல்வியை தமிழ்ப்பள்ளிகளில் செயல்படுத்துவதி எவ்வித தடையும் இல்லை என்று அவர் மேலும் சொன்னார்.
இன்னும் இரு வாரங்களில் சனதான தர்மக் கல்வி தொடர்பான மகஜர் பிரதமர் அலுவலகத்திடமும் கல்வி அமைச்சிடமும் சமர்ப்பிக்கப்படும் என்று தங்க.கணேசன் குறிப்பிட்டார்.
இந்த செய்தியார் சந்திப்பில் தெய்வீக வாழ்க்கைச் சங்கம், இஸ்கோன் மலேசியா, பன்னீரு வளர்ச்சி மையம், இந்து இளைஞர் இயக்கம், இந்து சேவை சங்கம், மலேசிய குருக்கள் சங்கம், மலேசிய அர்ச்சகர்கள் சங்கம் ஆகியவை பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

