
கோலாலம்பூர் ஜன 25-
சமூக நல்லிணக்கம் என்பது பல்லின சமூகத்தில் வாழ்கின்ற ஒரு மனிதன் சமூகத்தோடு முரண்பாடுகள் இன்றி இணக்கத்துடன் ஒற்றுமையாக வாழ பழகிக் கொள்ளும் நிலையே சமூக நல்லிணக்கம் ஆகும்.
சமீப காலமாக நம் நாட்டில் நாளுக்கு நாள் ஏதோவொரு வகையில் நல்லிணக்கத்தை சவாலுக்கு உட்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
அவற்றை உருவம் கொடுத்து அறிமுகப்படுத்துவதில் சமூக ஊடகங்களின் பங்கும் அதிகமாக இருக்கின்றது.
அப்படி மிக அண்மையில் நாட்டின் நல்லிணக்கத்தை சவாலுக்கு உட்படுத்தக் கூடிய வகையில் இடம்பெற்ற சொல்
(kuil Haram) என்பதாகும்.
மலேசிய நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் சமயச் சுதந்திர உரிமை, அதாவது Right to Freedom of Religion அளிக்கப்பட்டு இருக்கிறது.
கோவில்களின் நில சிக்கல் மற்றும் அனுமதியின்றி கட்டப்பட்ட கோவில்கள் என்பது ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களின் சரியான திட்டமிடல் இல்லாமல் மற்றும் அலட்சியப்போக்கும் தான் காரணம்.
சுதந்திரத்திற்கு முன்பே கட்டப்பட்ட பல கோவில்களும் இருக்கின்றன. அனுமதியின்றி கட்டப்பட்ட புதிய கோவில்களின் வரலாற்றை தீர விசாரித்து அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில் எந்த தவறும் இல்லை.
ஆனால் இந்த கோவில் நில சிக்கல்களை காரணம் காட்டி, பொதுமக்கள் தங்களது மன அமைதிக்காகவும், வழிபாட்டு நம்பிக்கைக்காகவும் வழிபடும் வழிபாட்டுத்தலங்களையே இழிவாக பேசுவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாது.
ஒரு நாட்டில் ஏற்படும் அணைந்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பதற்கு சட்டங்கள் இருக்கின்றன.
ஆனால் அந்த சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றதா
என்பதுதான் இன்றைய கேள்வியாக இருக்கின்றது.
பல சமய நம்பிக்கைகள் கொண்டு வாழும் மலேசிய நாட்டில் மதம் சார்ந்த சிக்கல்களை சரி செய்ய அரசாங்கத்தை அணுகுவதுதான் சரியான முறையாகும்.
சமூக வலைதளங்கள் அதற்கான தீர்வு ஆகாது. சரியான புரிதல் இல்லாத, தெளிவு இல்லாத செய்திகளை சமூகவலைதளங்களில் பேசுவது இன்னும் அதிகமான வெறுப்பை மக்களிடத்தில் விதைக்கும்.
எந்த ஒரு மத தொடர்பானவற்றை இழிவுபடுத்துவதற்கு மலேசிய அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை.
மலேசியா போன்ற பல்லின மக்கள் ஒற்றுமையாக வாழும் நாட்டில், சமூக வலைதளங்களை பயன்படுதி பிரித்தாளும் சூழ்ச்சியை யாரோ திட்டமிடுகிறார்களா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
சமூக வலைதளங்களில் வழிபாட்டையும் வழிபாட்டு தலங்களையும் இழிவாக பேசி சமூக நல்லிணக்கத்தை சிதைத்து மதமோதலை உருவாக்கி, மக்களைப் பிளவுபடுத்த முற்படும் சதிச்செயல்களை அரசாங்கம் உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.
அதே வேளையில் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
கணேசன்.
உரிமை அரசியல் இயக்கம்

