

இந்நாட்டில் இந்திய சமுதாயம் பல ஆண்டுகளாக எதிர் நோக்கி இருக்கும் பல்வேறு அடிப்படை பிரச்சனைகள் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் நேற்று முன் வைக்கப்பட்டது.
இந்த சந்திப்பில் குறைந்த மாணவர்களை கொண்டிருக்கும் தமிழ்ப் பள்ளிகளின் எதிர்காலம் குறித்து கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
இந்திய சமுதாயத்தின் பொருளாதார மேம்பாடு, அரசாங்க துறைகளில் வேலை வாய்ப்புகள், இந்து ஆலயங்கள், உயர் கல்வி வாய்ப்புக்கள், குடியுரிமை உட்பட பல பிரச்சனைகள் பிரதமரிடம் முன் வைக்கப்பட்டதாக மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.
இந்திய சமுதாயத்தின் சார்பில் நான் முன் வைத்த கோரிக்கைகளை மிகவும் உன்னிப்பாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் செவிமெடுத்தார்.
பிரதமர் சமுதாய குறைகளை தீவிரமாக எடுத்துக் கொண்டு, அவற்றை நிவர்த்தி செய்வதில் உறுதியாக உள்ளார். அனைத்து குறைகளும் திறம்பட மற்றும் சரியான நேரத்தில் நிவர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக பல்வேறு பங்குதாரர்கள் மற்றும் அரசு துறைகளுடன் அவர் தீவிரமாக கலந்து ஆலோசனை செய்யவிருப்பதாக அமைச்சர் கூறினார்.
இதன் மூலம் இந்திய சமுதாயத்தின் பிரச்சனைகள் படிப்படியாக தீர்வு காணப்படும் என்ற புதிய நம்பிக்கை பிறந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பில் கூட்டுறவு மேம்பாட்டு துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம் குலசேகரன், சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் மற்றும் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வி.கணபதிராவ், சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். கேசவன், சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யூனீஸ்வரன், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், , சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ இரமணன், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன், சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், நெகிரி செம்பிலான் ஆட்சிக் குழு உறுப்பினர் வீரப்பன் உட்பட ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஆர் நடராஜா ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

