டிவெட் (TVET) புரட்சிப் பயணம்: தொழில்நுட்பக் கல்வியை நோக்கி மாணவர்களை ஈர்க்கும் புதிய அதிரடி!

சுங்கை பூலோ, பிப். 11-

‘டிவெட் (தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை கல்விப் பயிற்சி) புரட்சிப் பயணம்’ என்பது வெறும் ஒரு விழிப்புணர்வுப் பயணம் அல்லது கண்காட்சி மட்டுமல்ல; நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தொழில்நுட்பத் திறனே அடிப்படை என்பதை உறுதி செய்வதில் ‘மடானி’ அரசாங்கம் கொண்டுள்ள உறுதியை இது காட்டுகிறது.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறுகையில், மனிதவள அமைச்சின் கீழ் உள்ள பல்வேறு ஏஜென்சிகளைச் சேர்ந்த 120 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இந்தப் பயணத்தில் பங்கேற்கின்றனர். மாணவர்களிடையே டிவெட் கல்வி குறித்த தகவல்களைக் கொண்டு சேர்க்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இவர்கள் பாடுபடுவார்கள் என்றார்.

“சிலாங்கூர் மற்றும் பேராக்கில் உள்ள ஆறு இடங்களில் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தச் சுற்றுப்பயணம், எதிர்கால வேலைவாய்ப்புகள், பயிற்சித் திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பத் திறன்களைக் கற்றுக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து மாணவர்களுக்கு விரிவாக விளக்கும்,” என்று அவர் கூறினார்.

பண்டார் பாரு சுங்கை பூலோ தேசிய இடைநிலைப்பள்ளியில் இன்று நடைபெற்ற ‘2026 டிவெட் புரட்சிப் பயணம்’ தொடக்க விழாவிற்குப் பிறகு டத்தோஸ்ரீ ரமணன் இதனைத் தெரிவித்தார்.

இந்த ஆண்டின் முதல் கட்டமாக, பேராக்கில் உள்ள கிர் ஜோஹாரி தேசிய இடைநிலைப்பள்ளி (பாகன் டத்தோ) மற்றும் ஸ்ரீ மஞ்சோங் தேசிய இடைநிலைப்பள்ளி உள்ளிட்ட ஆறு பள்ளிகளில் இந்தத் திட்டம் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அவர் கூறினார்.

டிவெட் கல்வியின் மிகப்பெரிய பலமே அதன் பட்டதாரிகளுக்குக் கிடைக்கும் வேலைவாய்ப்புதான் என்று குறிப்பிட்ட அவர், இக்கல்வியை முடிப்பவர்களில் 95.5 விழுக்காட்டினருக்கு வேலை கிடைப்பதாகக் கூறினார். இன்றைய வேலைச் சந்தையில் தொழில்நுட்பத் திறனே ஒரு “புதிய நாணயம்” போல அதிக மதிப்புமிக்கதாகக் கருதப்படுகிறது.

“இன்றைய தொழில்துறையினர் வெறும் வேலையாட்களை மட்டும் தேடவில்லை; செயற்கை நுண்ணறிவு (AI), ரோபோட்டிக்ஸ், தானியங்கி முறை (Automation) மற்றும் பசுமைத் தொழில்நுட்பம் போன்ற முக்கியமான துறைகளில் திறமையான பணியாளர்களைத் தேடித்தான் அவர்கள் ஏங்குகிறார்கள். எனவே, டிவெட் என்பது இனிமேல் இரண்டாவது தெரிவு அல்ல; அது ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்யும் முதன்மையான வழியாகும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், பண்டார் பாரு சுங்கை பூலோ தேசிய இடைநிலைப்பள்ளியின் மண்டபத்தைச் சீரமைக்கவும் தரம் உயர்த்தவும் 2 லட்சம் வெள்ளி நிதியொதுக்கீட்டை டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அறிவித்தார். ஏற்கனவே சிறிய பழுதுபார்ப்புப் பணிகளுக்காக வழங்கப்பட்ட 30 ஆயிரம் வெள்ளி நிதியோடு சேர்த்து இது வழங்கப்படுகிறது.

மாணவர்களுக்குச் சிறந்த கற்றல் சூழலை உருவாக்கித் தருவதும், நாட்டின் தொழில்நுட்பப் புரட்சியில் ஒவ்வொரு மாணவனையும் பங்கெடுக்கச் செய்வதும் மடானி அரசாங்கத்தின் நோக்கம் என்றும் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles