
கோலாலம்பூர் பிப் 24-
பேரா மாநிலத்தில் உள்ள ஆலய பிரச்சனைகளுக்கு அரசு ரீதியிலான தீர்வுகளை மேற்கொள்ள டத்தோ சிவனேசன் தலைமையில் குழு அமைந்துள்ளதை மலேசிய இந்துதர்ம மாமன்றம் வரவேற்று பாராட்டுகிறது என அதன் தேசியத் தலைவர் ரிஷிகுமார் வடிவேலு கூறினார்.
கடந்த வாரம் பேரா மாநில அரசு அதன் ஆட்சிக்குழு கூட்டத்தில் இப்பிரச்சனைக்கான தீர்வுகளை ஆராய்ந்து முடிவெடுக்க டத்தோ சிவனேசன் அவர்களுக்கு முழு ஒப்புதல் வழங்கியுள்ளதை எண்ணி மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டார்.
அதே வேளையில் ஆலயம் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஊராட்சி மன்றங்கள் முதலில் டத்தோ சிவனேசனை கலந்தாலோசித்த பின்பே நடவடிக்கையில் இறங்க வேண்டும் என ஆட்சிக்குழு முடிவெடுத்து 15 ஊராட்சி மன்றங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதானது மிகவும் வரவேற்கக் கூடிய விஷயமாக இருக்கிறது என பாராட்டினார்.
அன்மையில் பிரதமர் கூறியுள்ளதுபடி ஆலய பிரச்சனைகளை கையாளும்போது இரண்டு விஷயங்களை கவனிக்க வேண்டும்.
அதாவது அந்த ஆலயத்தின் உண்மை வரலாறு அடுத்தது நிலப் பதிவுச் சட்டம். இந்த இரண்டையும் வைத்துத்தான் முடிவெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
அதன் அடிப்படையில் ஆலயப் பிரச்சனைகளை அரசியல் ரீதியாகவும் நிலச்சட்ட ரீதியாகவும் தீர்வு காண டத்தோ அவர்களின் முயற்சிகளுக்கு இந்துதர்ம மாமன்றம் முழு ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்குவதாக தெரிவித்தார்.
மற்ற மாநிலங்களில் உள்ள இந்திய ஆட்சிக்குழு உறுப்பினர்களும் இதனைப் பின்பற்றி குழு அமைத்து அரசு ரீதியில் தீர்வுகளைக் காண வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் இப்பிரச்சனைகளை சுலபமாக கையாளலாம். இதனை மாநில இந்திய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அனைவரும் முன்னெடுப்பார்கள் என பெரிதும் எதிர்ப்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.

