
சிரம்பான், மார்ச் 14-
செத்தியா காசே மகளிர் மற்றும் இளைஞர் நல அமைப்பு 2026ஆம் ஆண்டிற்கான தனது முதல் திட்டமாக “அடிப்படை ஒப்பனை பயிற்சி பட்டறையை எனது கலாச்சார அமைப்புடன் இணைந்து சிரம்பானில் சிறப்பாக நடத்தி நிறைவு செய்துள்ளது.
இந்த பயிற்சி பட்டறையில் அடிப்படை ஒப்பனை(மேக்கப்) திறன்கள் மற்றும் தலைமுடி அலங்கார முறைகள் கற்பிக்கப்பட்டன. பங்கேற்பாளர்கள் ஒப்பனை குறிப்பு மற்றும் தொழில்நுட்பங்களை கற்றது மட்டுமில்லாமல், தாங்களே தங்களின் ஒப்பனைகளை செய்து பார்க்கும் நடைமுறை அனுபவத்தையும் பெற்றனர்.
பட்டறையின் நிகழ்ச்சி ஒழுங்குகளை சிரம்பான் செயற்குழு உறுப்பினர் திருமதி கனகேஸ்வரி அவர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்தார். அவருக்கு ஆசிரியர் திருமதி காஞ்சனாதேவி அவர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்.
அமைப்பின் நோக்கத்திற்கிணங்க அதன் தலைவர் திருமதி செல்வி கிருஷ்ணன் அவர்கள், “மை கல்ஸ்சர்”( MyCULTURE) அமைப்பின் டாக்டர் வி. கந்தசாமி அவர்களுடன் இணைந்து எதிர்காலத்தில் பெண்களுக்கு பயனுள்ள பல்வேறு திட்டங்களை தொடர்ந்து நடத்துவோம் என தெரிவித்தார்.
மேலும், திருமதி செல்வி கிருஷ்ணன் அவர்கள், இத்தகைய பயிற்சிகளின் நோக்கம் பெண்கள் தங்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்காக மட்டுமல்லாமல், கற்றறிந்த திறன்களை பயன்படுத்தி வருமானம் ஈட்டும் வாய்ப்புகளையும் உருவாக்குவதாகும் என வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய யு.பி. டத்தோ குணசேகரன் அவர்கள், நிகழ்ச்சியின் வெற்றியை பாராட்டி, பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் இவ்வமைப்பு இதுபோன்ற பயிற்சிகளை தொடர்ந்து முறையாக நடத்த வேண்டும் என ஊக்கமளித்தார்.
இப்பட்டறையை தொழில்முறை ஒப்பனை கலைஞர் திரு. சுகன் மற்றும் அவரது குழுவினர் திறம்பட நடத்தினர்.
பங்கேற்பாளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டு, பெண்களுக்காக இதுபோன்ற மேலும் பல பயிற்சி வகுப்புகள் மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர்.

