சம்ரி வினோத், தமீம் மலேசியா திரும்பி காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – டத்தோஶ்ரீ ரமணன்

சுங்கை பூலோ, மார்ச் 14 –
பல்வேறு சர்ச்சைக்குரிய வழக்குகளில் சிக்கி, தற்போது தாய்லாந்திற்கு தப்பியோடியதாகத் தேடப்படும் சம்ரி வினோத் மற்றும் தமீம் தஹ்ரி ஆகிய இருவரும், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பாமல் உடனடியாக மலேசியா திரும்பி காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

இன்று இங்கு நடைபெற்ற ‘Ziarah MADANI’ நோன்புப் பெருநாள் உணவுப் பொட்டலங்கள் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் இனம், மதம் மற்றும் மன்னராட்சி (3R) தொடர்பான விவகாரங்களைக் கையில் எடுக்கும் எவருக்கும் இந்த அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என்று ஆணித்தரமாகத் தெரிவித்தார்.

“அவர் சீனராகவோ, மலாய்க்காரராகவோ அல்லது இந்தியராகவோ இருக்கலாம்; அது முக்கியமல்ல. 3R விவகாரங்களைப் பேசி நாட்டின் ஒற்றுமையைக் கெடுக்க முயன்றால், அவர்கள் மீது சமரசமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் காலித் இஸ்மாயில் விடுத்த அறிக்கையின்படி, சம்பந்தப்பட்ட இருவரும் தற்போது தாய்லாந்தில் தலைமறைவாக உள்ளனர்,” என்று அவர் குறிப்பிட்டார்.

தலைமறைவாக உள்ள இருவருக்கும் சவால் விடுத்த ரமணன், “நீங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்றால் ஏன் மறைந்து வாழ வேண்டும்? மலேசியாவுக்குத் திரும்புங்கள் என்பதே எனது அறிவுரை.

இதற்கு முன்பு பொதுவெளியில் தைரியமாகப் பேசி, மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு குழப்பத்தை விளைவித்த நீங்கள், இப்போது சட்டத்திற்குப் பயந்து ஓடாமல் துணிச்சலுடன் நாடு திரும்புங்கள்,” என்று சாடினார்.

முன்னதாக, சம்ரி வினோத் மற்றும் தமீம் தஹ்ரி ஆகியோர் வெவ்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்பட்டு வருவதையும், அவர்கள் தாய்லாந்திற்குத் தப்பியோடியதையும் காவல்துறைத் தலைவர் உறுதிப்படுத்தியிருந்தார். அவர்களைக் கண்டறிய தாய்லாந்து அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மலேசியக் காவல்துறை தற்போது தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சம்ரி வினோத் கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி தலைநகரில் ஆற்றிய உரை தொடர்பான விசாரணை அறிக்கை ஏற்கனவே சட்டத்துறைத் தலைவரிடம் (AGC) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், லங்காவியில் உள்ள ஒரு கோயில் தளத்தில் இந்து மதத்தின் புனிதச் சின்னமான ‘சூலத்தை’ சேதப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் தமீம் தஹ்ரி மீது தண்டனைச் சட்டத்தின் 295-வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய கெடா மாநில அரசுத் தரப்பு அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட இருவரும் மலேசியாவுக்குக் கொண்டு வரப்பட்டவுடன், அவர்கள் மீதான நீதிமன்றக் குற்றச்சாட்டுகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் உடனடியாகத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles