
செரம்பான், ஜூலை 9 –
பல ஆண்டுகளாக நீடித்து வந்த லாடாங் லாபு பகுதி 4 தமிழ்ப்பள்ளியின் இடமாற்றப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதைத் தொடர்ந்து, புதிய பள்ளி கட்டுமானப் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.
பிரதமரின் சிறப்பு அதிகாரி என். சண்முகம் மூக்கன் வெளியிட்ட அறிக்கையில், இப்பள்ளி முன்பு சைம் டார்பி நிறுவனத்துக்குச் சொந்தமான நிலத்தில் இயங்கி வந்ததாகவும், பின்னர் அந்நிலம் Matrix Concepts Holdings Berhad நிறுவனத்தால் மேம்பாட்டுத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்டதால் பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
மத்திய அரசு, நெகிரி செம்பிலான் மாநில அரசு, Matrix Concepts Holdings Berhad மற்றும் பள்ளி நிர்வாக சபை ஆகியவற்றின் நெருக்கமான ஒத்துழைப்பின் மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதாக அவர் கூறினார்.

இந்த முயற்சியில் போக்குவரத்து அமைச்சரும் செரம்பான் நாடாளுமன்ற உறுப்பினருமான அந்தோணி லோக் முக்கிய பங்காற்றியதுடன், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அருள் குமார் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுடன் ஒருங்கிணைப்பை விரைவுபடுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், புதிய தமிழ்ப்பள்ளிக்காக Matrix Concepts Holdings Berhad நிறுவனம் நிலத்தை ஒதுக்கியதோடு, மாநில அரசு அனுமதி நடைமுறைகளைத் துரிதப்படுத்தி, பள்ளி நிர்வாக சபையின் பெயரில் நில உரிமையைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

