நெகிரி செம்பிலானில் PPP-க்கு இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் வழங்கப்பட வேண்டும்!

கோலாலம்பூர் ஜூலை 16- நெகிரி செம்பிலான் மாநில: சட்டமன்றத் தேர்தலில் (PRN), PPP கட்சிக்கு குறைந்தபட்சம் இரண்டு மாநில சட்டமன்ற (DUN) தொகுதிகளை ஒதுக்கிட, பாரிசான் நேஷனல் உயர்மட்டத் தலைமையிடம் நான் வலியுறுத்துகிறேன்.

இது, பாரிசான் நேஷனலின் அங்கக் கட்சியாக PPP தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் விசுவாசம், அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புக்கான உரிய அங்கீகாரமாகும்.

PPP நிறுவப்பட்ட நாள்முதல் பல்வேறு அரசியல் சவால்களை எதிர்கொண்டு, பாரிசான் நேஷனலின் போராட்டத்தை தொடர்ந்து காத்து வந்துள்ளது.

எத்தகைய சவால்கள் வந்தபோதிலும், PPP உறுப்பினர்களும் தலைவர்களும் உறுதியான விசுவாசத்துடன் இருந்து, பாரிசான் நேஷனலின் வெற்றிக்காக இடைவிடாது உழைத்து வருகின்றனர்.

இந்த அர்ப்பணிப்பு ஜொகூர் மாநிலத் தேர்தலில் தெளிவாக வெளிப்பட்டது. நாடு முழுவதிலுமிருந்த PPP தேர்தல் இயந்திரம், பாரிசான் நேஷனல் வேட்பாளர்களுக்கு ஆதரவாக முழுமையாக இயக்கப்பட்டது.

உறுப்பினர்கள் நேரம், உழைப்பு பாராமல் களமிறங்கி, தேர்தல் நடவடிக்கை அறைகள் நடத்துதல், வீடு தோறும் பிரச்சாரம் செய்தல், வாக்காளர் இயக்கம் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வெற்றியை உறுதி செய்தனர்.

இது எந்த நிபந்தனையும் இன்றி மேற்கொள்ளப்பட்ட சேவையாகும்; எங்களின் முன்னுரிமை பாரிசான் நேஷனலின் வெற்றிதான்.

அங்கக் கட்சிகளின் விசுவாசமும் தியாகமும் தேர்தல் காலங்களில் மட்டும் பாராட்டப்படக் கூடாது. அவை, தேர்தலில் பாரிசான் நேஷனலை பிரதிநிதித்துவப்படுத்தும் நியாயமான வாய்ப்புகளாகவும் வெளிப்பட வேண்டும்.

நெகிரி செம்பிலானில் PPP-க்கு குறைந்தபட்சம் இரண்டு தொகுதியாவது வழங்குவது மிகைப்படுத்தப்பட்ட கோரிக்கை அல்ல.

மாறாக, எப்போதும் பாரிசான் நேஷனலுடன் உறுதியாக நின்று சேவையாற்றிய ஒரு அங்கக் கட்சிக்கான நியாயமான அங்கீகாரமாகும். மேலும், விசுவாசம், திறன் மற்றும் மக்களுக்கான சேவைச் சாதனைகளை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு அங்கக் கட்சியையும் பாரிசான் நேஷனல் மதிக்கிறது என்பதையும் இது நிரூபிக்கும்.

PPP-யிடம் திறமையும் நேர்மையும் கொண்ட தலைமைத்துவமும், வெற்றியை உருவாக்க உறுதியாக செயல்படும் வலுவான அடிப்படைத் தேர்தல் இயந்திரமும் உள்ளன என்ற நம்பிக்கை எனக்குள்ளது. போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டால், அந்த நம்பிக்கையை முழுப் பொறுப்புடன் ஏற்று, மக்களின் நலனுக்கும் கூட்டணியின் வெற்றிக்கும் கடுமையாக உழைப்போம்.

பாரிசான் நேஷனலின் உண்மையான பலம், அதன் அனைத்து அங்கக் கட்சிகளுக்கிடையேயான ஒற்றுமையிலும் பரஸ்பர மரியாதையிலும் உள்ளது என்று நான் நம்புகிறேன்.

நெகிரி செம்பிலானில் PPP-க்கு போட்டியிட வாய்ப்பு வழங்குவது கூட்டணியை மேலும் வலுப்படுத்துவதோடு, விசுவாசமாக உழைக்கும் ஒவ்வொரு கட்சிக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என்பதையும் நிரூபிக்கும்.

PPP தனது விசுவாசத்தை வார்த்தைகளால் அல்ல, செயல்களால் நிரூபித்துள்ளது. இப்போது, அந்த விசுவாசம் நெகிரி செம்பிலானில் பாரிசான் நேஷனல் வேட்பாளராக மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்யும் வாய்ப்பாக மாற்றப்பட வேண்டிய நேரம் வந்துள்ளது.

இப்படிக்கு
சத்யா சுதாகரன்

தேசிய இளைஞர் அணி தலைவர் (PPP)

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles