
புக்கிட் மெர்தாஜாம், ஜூலை 25: மலேசியாவில் எந்த அரசியல் தலைவரும் பிற இனங்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவிக்கக் கூடாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
மலேசியா கடந்த 70 ஆண்டுகளாக அனைத்து இனங்களையும் அரவணைக்கும் ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட நாடு என்றும் அவர் குறிப்பிட்டார்.
“மலாக்காரர்கள் பெரும்பான்மையாக மலாயா நிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இந்தோனேசியா, சீனா, கொரியா உள்ளிட்ட பல்வேறு வம்சாவளியினரும் உள்ளனர். அவர்களை மலேசியர்கள் அல்ல என்று யாரும் கூற முடியாது.
அதேபோல், சீன மற்றும் இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அரசியலமைப்பை ஏற்று, நாட்டுக்கு விசுவாசமாக நல்ல குடிமக்களாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களும் மலேசியாவின் வலிமையாகக் கருதப்பட வேண்டும்.
எனவே, எந்த இனத்தையும் இழிவுபடுத்தும் அல்லது அவர்களின் பங்களிப்பை மறுக்கும் எந்தக் கருத்தையும் நான் ஏற்கவில்லை,” என்று அவர் தெரிவித்தார்.
புக்கிட் மெர்தாஜாமில் நடைபெற்ற ஷேக் தாஹிர் ஜலாலுடின் தேசிய சமய இடைநிலைப் பள்ளி (SMKA Sheikh Tahir Jalaluddin) திறப்பு விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனை கூறினார்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ஜெம்போலில் நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்டத்தில், பாஸ் கட்சியின் தேர்தல் இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது சனுசி முகமது நூர், “மலாயர்களுக்கு மலாயா நிலம் மட்டுமே தாயகம்; இந்தியர்களுக்கு இந்தியாவும், சீனர்களுக்கு சீனாவும் உள்ளது” என்று கூறியிருந்தார்.
மேலும், இனம் மற்றும் மதத்தைப் பாதுகாக்க பாஸ் மற்றும் அம்னோ மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்தக் கருத்துக்கு பதிலளித்த பிரதமர் அன்வார், மலேசியாவின் பல இன ஒற்றுமையைப் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும் என்றும், எந்த இனத்தையும் புறக்கணிக்கும் அல்லது இழிவுபடுத்தும் அரசியல் பேச்சுகளை ஏற்க முடியாது என்றும் வலியுறுத்தினார்.

