
சுங்கை பூலோ, ஆக. 3 –
இளைஞர்களின் ஆரோக்கியம், நலன் மற்றும் சமூகப் பங்கேற்பை மேம்படுத்தும் நோக்கில், சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் 10,000 இளையோருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் சிறப்பு மக்கள் நலத் திட்டத்தை அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் மனிதவள அமைச்சருமான டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் நேற்று அறிவித்தார்.
இந்த முயற்சி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல், இளையோரின் அன்றாடப் பயண வசதியை மேம்படுத்தி, குடும்ப உறவுகள், சமூக ஒற்றுமை மற்றும் பொறுப்புணர்வுமிக்க குடிமக்கள் பண்பை வலுப்படுத்தும் நீண்டகால முதலீடாக அமையும் என்று அவர் கூறினார்.

சுங்கை பூலோ எம்பிஎஸ்ஏ மெராந்தி மண்டபத்தில் நடைபெற்ற தொகுதி நாடாளுமன்ற அளவிலான தேசிய தினக் கொண்டாட்டத் தொடக்க விழா மற்றும் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சியில் உரையாற்றிய ரமணன், மொத்தம் 10,000 சைக்கிள்கள் தகுதியான இளைஞர்களுக்கு கட்டம் கட்டமாக வழங்கப்படும் என்றும், அதன் முதல் கட்டமாக 500 பேருக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
“இது வெறும் சைக்கிள்கள் வழங்கும் திட்டமல்ல. நமது இளையோரின் எதிர்காலத்தில் செய்யப்படும் அர்த்தமுள்ள முதலீடு. அதிகமான இளையோர் உடற்பயிற்சியில் ஈடுபட்டு ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும். அதே நேரத்தில், சைக்கிள் பயன்பாடு குடும்ப உறவுகள், மற்றும் சமூக ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும் ஒரு நல்ல பண்பாட்டை உருவாக்கும்,” என்று அவர் கூறினார்.

அறிவிக்கப்படும் ஒவ்வொரு திட்டமும் மக்களின் வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே தமது அணுகுமுறை என்றும், அறிவிப்புகளை விட செயல்படுத்துவதற்கே தாம் முக்கியத்துவம் அளிப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
ஒரு நாடாளுமன்றத் தொகுதியின் வளர்ச்சி என்பது சாலைகள், கட்டடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளால் மட்டுமே அளவிடப்பட முடியாது என்றும், கல்வி, இளைஞர் மேம்பாடு, சமூக நலன் மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் திட்டங்களும் அதே அளவுக்கு முக்கியமானவை என்றும் ரமணன் குறிப்பிட்டார்.
“மடானி அரசாங்கத்தின் வளர்ச்சிப் பயணத்தில் எந்த சமூகமும், எந்தக் குடும்பமும் பின்தங்கக் கூடாது. மக்களின் தேவைகளை மையமாகக் கொண்ட கொள்கைகளே நாட்டின் முன்னேற்றத்திற்கு வலுவான அடித்தளமாக அமையும்,” என்று அவர் தெரிவித்தார்.

அதேவேளையில், சைக்கிள்களைப் பெறும் இளையோர் சாலைப் பாதுகாப்பு விதிகளை எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், வழங்கப்பட்டுள்ள இந்த வசதியை பொறுப்புடனும் பயனுள்ள வகையிலும் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இளையோரின் ஆரோக்கியம், நலன் மற்றும் சமூக ஒற்றுமையை ஒருங்கிணைத்து முன்னெடுக்கும் இந்த மக்கள் நலத் திட்டம், சுங்கை பூலோவில் ஆரோக்கியமான, சுறுசுறுப்பான மற்றும் பொறுப்புணர்வுமிக்க இளம் தலைமுறையை உருவாக்கும் முக்கிய முயற்சியாக அமைந்துள்ளது.

