

ஷா ஆலாம், ஆகஸ்ட் 8 — ‘சிலாங்கூர் மெகா ஜாப்கேர் 2026’ (Selangor Mega Jobcare 2026) வேலைவாய்ப்புத் திட்டம், வேலை தேடுபவர்களை முதலாளிகளுடன் இணைப்பது மட்டுமல்லாமல், அவர்கள் தங்களுக்குப் பொருத்தமான வேலைகளைப் பெறுவதற்கும், தொழில்துறைக்குத் தேவையான திறன்களைப் புரிந்துக் கொள்ளவும் உதவுகிறது.
வேலை தேடுபவர்களின் திறன்களுக்கும், தொழில்துறையினரால் வழங்கப்படும் வேலைகளின் தேவைகளுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளைக் களைவதற்கு இந்த அணுகுமுறை மிகவும் முக்கியமானது என்று மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருதின் ஷாரி கூறினார்.
அமிருடின் ஷாரி வேலைத் தேடுபவர்களைச் சந்தித்துப் பேசினார்— படம் : மீடியா சிலாங்கூர்
இன்று ஷா ஆலாம் மாநாட்டு மையத்தில் (SACC) நடைபெற்ற ‘ 2026 சிலாங்கூர் மெகா ஜாப்கேர் ‘ வேலைவாய்ப்புத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து அமிருதின் ஷாரி உரையாற்றினார்.
இந்த வேலை வாய்ப்புத் திட்டம் 147 முதலாளிகளை ஒன்றிணைத்து 11,000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை வழங்குகிறது.
அந்த மொத்த காலிப்பணியிடங்களில், 98.4 சதவீத வேலை வாய்ப்புகள் சிலாங்கூரிலேயே வழங்கப்படுகின்றன.
மேலும் 62.2 சதவீதப் பணிகள் 3,000 ரிங்கிட்டுக்கும் அதிகமான மாதாந்திர சம்பளத்தைக் கொண்டவையாகும்.
“இது சிலாங்கூரில் வாழ்வதற்கான தேவைகளுக்குப் பொருத்தமான ஒரு வருமானம் என்று நான் கருதுகிறேன் என அமிருடின் ஷாரி கூறினார்.
இதனிடையே, இத்திட்டம் வெறும் வேலை வாய்ப்புகளை மட்டும் ஏற்படுத்தவில்லை; மனித மூலதன மேம்பாட்டிற்கான ஒரு விரிவானத் தளமாகுமென மனிதவள விவகாரங்களுக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வி.பாப்பாராயுடு தெரிவித்தார்.
மெகா ஜோப்கேர் நிகழ்ச்சியில் உரையாற்றும் வீ.பாப்பாராய்டு படம் :மீடியா சிலாங்கூர்
இதில் வேலை தேடுபவர்கள் நேரடி நேர்காணல்கள், வேலைப் பொருத்தம், ஒரே நாளில் வேலை பெறும் வாய்ப்புகள், சுயவிவரக் குறிப்பு (resume) சரிபார்ப்பு மற்றும் தொழில்முறை ஆலோசனை ஆகியவற்றில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெறுகின்றனர்,” என்று அவர் கூறினார்.

