தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிக்கும் – கோபிந்த் சிங்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 11 — ஒவ்வொரு குழந்தைக்கும் சிறந்த கல்வி வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்யும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, தமிழ்ப்பள்ளிகளுக்கு (SJKT) அரசாங்கம் தொடர்ந்து வலுசேர்க்கும் என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.

தமிழ்ப்பள்ளிகள் வெறுமனே கல்வி நிறுவனங்கள் அல்ல என்றும், மாணவர்களிடையே கல்வி, கலாசாரம் மற்றும் அடையாளத்தை வளர்ப்பதில் அவை முக்கியப் பங்காற்றி வருவதாக தனது முகநூல் பதிவில் அவர் தெரிவித்தார்.

43ஆவது எஃபிங்ஹாம் தமிழ்ப்பள்ளியின் வருடாந்திர விளையாட்டுப் போட்டியில் இளம் விளையாட்டு வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியதை நேரில் கண்டது, பள்ளிகளுக்கு வலுசேர்ப்பதற்கும் எதிர்கால தலைமுறையினருக்கு வழிகாட்டுவதற்குமான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டுவதாகப் கோபிந்த் தெரிவித்தார்.

ஒவ்வொரு குழந்தைக்கும் தங்களது திறமைகளையும் ஆற்றலையும் முழுமையாக வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், அனைவருக்கும் வளமான மலேசியாவை உருவாக்குவதில் தங்களது பங்களிப்பை வழங்குவதற்கான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, 2023ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தமிழ்ப்பள்ளிகளின் பராமரிப்பு, மேம்பாட்டுப் பணிகள் மற்றும் புதிய வசதிகளைக் கட்டுவதற்காக மொத்தம் 23 கோடியே 74 லட்சத்து 80 ஆயிரம் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாகப் கோபிந்த் தெரிவித்தார்.

இந்த மிகப்பெரிய ஒதுக்கீடு, நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் ஒட்டுமொத்த நலனில் அரசாங்கம் கொண்டுள்ள உறுதிப்பாட்டையும், மாணவர்கள் தங்களது பள்ளிப் பருவம் முழுவதும் சிறந்த கல்வி மற்றும் வசதிகளைப் பெறுவதை உறுதி செய்வதற்கான அதன் முயற்சியையும் தெளிவாகப் பிரதிபலிப்பதாக அவர் கூறினார்.

நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதில் அரசாங்கம் கொண்டுள்ள உறுதிப்பாட்டையும் இந்த ஒதுக்கீடு எடுத்துக்காட்டுவதாக கோபிந்த் தெரிவித்தார்.

இளம் தலைமுறையினர் சிறந்த முறையில் கல்வி கற்பதற்கு ஏதுவான சூழலை உருவாக்க, பள்ளிகளின் கல்வி வசதிகளை வலுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“மக்களுக்குச் சேவை செய்வதில் என்னால் முடிந்த அனைத்தையும் தொடர்ந்து செய்வேன். சமூகத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதற்குத் தேவையான அனைத்தையும் மேற்கொள்வேன்,” என்று கோபிந்த் சிங் தேவ் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles