
புந்தோங்,ஆக13: கல்வி மட்டுமே சமூக உருமாற்றத்தின் மூலதனம் என்றுரைத்த புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு துள்சி மனோகரன் கல்வியில் இந்தியச் சமுதாயம் நனிச் சிறந்த இலக்கை எட்ட வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.
அதே வேளையில்,கல்வி தேவைக்காக புந்தோங் சட்டமன்ற சேவை மையத்தின் கதவுகள் திறந்தே இருக்குமென்றும் மாணவர்களுக்கான உதவி வீடு தேடி சென்று வழங்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
பொலிடெக்னிக் சுல்தான் ஹஜி அஹ்மாட் ஷாவில் தனது பொறியியல் தொழில்நுட்ப அடிப்படைக் கல்வியை தொடரவிருக்கும் மாணவர் மிதனேஷ் சந்திரசேகரனுக்கு கல்வி தேவைக்காக வீடு தேடி சென்று மடிக்கணினி வழங்கிய பின்னர் துள்சி மனோகரன் இவ்வாறு கூறினார்.
நடுத்தர குடும்பச் சூழலைக் கொண்ட மிதனேஸின் குடும்பத்தின் வருமானம் அவரது தந்தையின் வருமானத்தை நம்பியிருக்கும் நிலையில் அம்மாணவருக்கு வழங்கப்பட்ட மடிக்கணினி உதவி அக்குடும்பத்தின் பொருளாதார சூழலுக்கு பெரும் துணை நிற்கும் என்றார்.
கல்வியில் சிறந்து விளங்கியதோடு தேர்விலும் நன்நிலை தேர்ச்சியும் பெற்றிருந்த மிதனேஸ் உயர்க்கல்வியிலும் சிறந்த தேர்ச்சி பெற்று வாழ்வில் நன்நிலைக்கு உயர வேண்டும் எனவும் தனது எதிர்பார்ப்பினை அவர் வெளியிட்டார்.
மிதனேஸ்க்குமடிக்கணினி வழங்கியதோடு மட்டுமின்றி அவரது குடும்பச் சூழலையும் அவரது உடன் பிறப்புகளின் கல்வி நிலையையும் கேட்டறிந்து தனது பங்களிப்பையும் நல் ஆலோசனைகளையும் அவர்களுக்கு துள்சி மனோகரன் வழங்கினார்.

