
புத்ராஜெயா:
ஜொகூரில் உள்ள தஞ்சோங் லாங்சட் துறைமுகத்தில் தரைவழித் தொட்டிகளில் கலக்கப்படும் எண்ணெய் சரக்குகளுக்கான வரிகள் குறித்த நிச்சயமற்ற தன்மை தொடர்பாக, தொழில் துறையினரிடமிருந்து வந்த புகார்கள் குறித்து போக்குவரத்து அமைச்சு நிதி அமைச்சிடம் கருத்துக்களைக் கோரும்.
நேற்று ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, வரி விதிப்பு முறை குறித்த தகவல் தனது அமைச்சிடம் இல்லை என்று அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.
இந்த விவகாரம் சுங்கத்துறை, நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர், நாங்கள் நிதி அமைச்சகத்திடம் இருந்து மேலதிக தகவல்களைப் பெறுவோம், என்று கூறினார்.
நேற்று, இந்த விவகாரம் குறித்த நிச்சயமற்ற தன்மையால் துறைமுகத்தின் கப்பல் போக்குவரத்து, பெட்ரோலிய வணிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில் துறையினரிடமிருந்து புகார்கள் வந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்த நடைமுறை அனுமதிக்கப்பட்டதா, வரிகள் எவ்வாறு விதிக்கப்பட வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துமாறு மலேசிய அரச சுங்கத் துறையை மேரிடைம் நெட்வொர்க் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோஸ்ரீ ஜெயேந்திரன் ராமசாமி வலியுறுத்தினார்.
அவரைப் பொறுத்தவரை, கப்பல் அல்லது பரிமாற்ற நடவடிக்கைகளின் போது, கப்பல்களிலிருந்து தரைத் தொட்டிகளுக்கு இறக்கப்படும் பெட்ரோலிய சரக்குகளை தஞ்சோங் லங்சாட் துறைமுகம் கையாள்வதால் இந்த விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்தது.
முன்னதாக, கப்பல்களிலிருந்து இறக்கப்பட்ட பிறகு, வெவ்வேறு சரக்குகளிலிருந்து வந்த எண்ணெய் தரைத் தொட்டிகளில் கலக்கப்பட்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து கவலைகள் எழுப்பப்பட்டன.
ஆவணங்கள் சரியாகப் புதுப்பிக்கப்படாவிட்டால், இந்தச் செயல் சரக்கின் நிலையை மாற்றி, வகைப்பாடு, மதிப்பீடு, வரிவிதிப்பில் சிக்கல்களை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது,

